ஒரு கூட்டு கிளியாக.. அதிமுக ஒன்னு சேரணும்! ஓபிஎஸ்க்காக தூது போன குரூப்.. அப்படியே எஸ்கேப்பான ‘மாஜி’
சென்னை: அதிமுகவில் தனக்கு பதவி வேண்டாம் இணைத்துக் கொண்டாலே போதும் என வெளிப்படையாகவே பேசி இருந்தார் முன்னாள் முதலமைச்சரும் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம். தற்போது இதே கோரிக்கையுடன் மூத்த முன்னாள் அமைச்சர் ஒருவரை ஒருங்கிணைப்பு தரப்பு அணுகியதாகவும், தன்னிடம் பேச வேண்டாம் தனக்கும் பிரச்சினை வந்துவிடும் என அவர் விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறுண்டு கிடக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதல் அந்தக் கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது நடைபெற்ற இடைத்தேர்தல், அதற்குப் பிறகு மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள், ஈரோடு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.
2024 மக்களவைத் தேர்தலிலும் 40க்கு 40 என தமிழகம் புதுச்சேரியில் அதிமுக மண்ணை கவ்வியது கட்சி தொண்டர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனி அணிகளாகவும் கட்சிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணித்து விட்டனர், அதிமுக தலைமை மாற்ற வேண்டி நேரம் வந்துவிட்டது என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.
அதேபோல இத்தனை நாள் கட்சிக்காக தான் ஒதுங்கி இருந்தேன் இனிமேல் பொறுத்துக் கொள்ள முடியாது என சசிகலாவும் அறிக்கை விட அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால் யாருக்கும் கட்சியில் இடம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் சிலர் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற ஒன்றை ஆரம்பித்து இருக்கும் நிலையில் அதனையும் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் தனக்கு பதவி வேண்டாம் கட்சியில் சேர்த்துக் கொண்டாலே போதும் என பேசி இருந்தார். முன்னதாக அவர் தரப்பில் இருந்த புகழேந்தி, ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட பலரும் அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற ஒன்றை ஆரம்பித்து கட்சியை ஒருங்கிணைக்க போகிறோம் என பேட்டி அளித்து வருகின்றனர். ஆனால் அது பேட்டியோடு நின்று விட்டது. அதற்கு பிறகாக எந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை.
இடையில் சசிகலா வேறு 'அம்மாவின் வழி மக்கள் பயணத்தை' தொடங்கி இருக்கிறார். தென்காசியில் தொடங்கிய அவரது பயணம் அவர் தரப்பை உற்சாகமடைய செய்திருந்தாலும் அதிமுகவில் எந்த விதமான அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல அதிமுக கூட்டத்தில் பேசப்படும் இந்த தகவலும் வெளியில் செல்லக்கூடாது அப்படி செல்வது எதிர் தரப்புக்கு ஆயுதம் போல மாறிவிடும் என எடப்பாடி பழனிச்சாமி கடுமையாகவே பேசி இருக்கிறார். இதன் காரணமாகவே அதிமுக ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
இந்த விவகாரங்கள் ஒருபுறம் இருக்க சட்டமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவில் சேர்ந்து விட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக இருக்கிறது. இதற்காக அதிமுகவில் இருக்கும் மூத்த முன்னாள் அமைச்சர் தரப்பை ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ்-ன் சம்மதத்தின் பெயர்தான் அவர்கள் பேசியதாக சொல்லப்படுகிறது. ஆனால் "ஏற்கனவே நானே நிறைய பிரச்சனையில் இருக்கிறேன். இதை வேறு நான் சொன்னால் நீங்களும் அவர்களுடன் கூட்டா என என்னை கேட்டு விடுவார்கள், நான் இதற்கு தயாராக இல்லை. நீங்கள் வேறு ஆளை பாருங்கள்" என கை விரித்து விட்டாராம்
அருகே இருக்கும் மாவட்டம், ஒரே சமூகம் என இவரை நம்பி வந்தால் இவரும் இப்படி கைவிரித்து விட்டாரே என அதிருப்தியோடு இருக்கிறது தூதாகப் பறந்த குழு. 1996 வரை கட்சியில் மிகப்பெரிய அரசியல் முகமாக வலம் வந்த அந்த முன்னாள் அமைச்சர் சுமார் 10 ஆண்டு காலம் வனவாசம் அனுபவித்தார். 2016-ல் தான் அதிமுகவுக்குள்ளேயே அவரால் வர முடிந்தது. தற்போது எடப்பாடி தயவால் பல பதவிகளை வகித்து வரும் நிலையில், அவர் உடனேயே பயணிக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார். எனவே தான் சமுதாய ரீதியாக தன்னை அணுகிய போதும் அவர் பேச்சுவார்த்தைக்கு மறுத்துவிட்டார் என்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications