'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
சென்னை: ஈழத்தில் பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தார்; வகை வகையான அசைவ உணவுகளை பிரபாகரன் மனைவி மதிவதினி சமைத்துக் கொடுத்தார்; தமது பாதுகாப்புக்கு மெய்ப்பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டு மேடைகளில் பேசிவருவது அத்தனையும் கட்டுக்கதை; திரிபுவாதம்- பிறருக்கு நடந்தவற்றை தனக்கு நடந்ததாக திரித்து பேசி வருகிறார்; அத்துடன் பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாட்டம் நடத்துகிறார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படக் கலைஞர் -போட்டோகிராபர் அமரதாஸ் கடுமையாக குற்றம்சாட்டி இருக்கிறார்.
சன் நியூஸ் தொலைக்காட்சி முதன்மை செய்தி ஆசிரியர் மு.குணசேகரனுக்கு விடுதலைப் புலிகளின் போட்டோகிராபர் அமரதாஸ் கொடுத்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் இயக்கத்தால் எல்லாளன் என்ற திரைப்படத்தின் ஸ்டில் போட்டோகிராபராக நான் பணியாற்றினேன். 2008-ம் ஆண்டு ஆனைஇரவு முகாமில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டது.

துப்பாக்கிகள் மீது பிரியப்பட்ட சீமான்
அப்போது, திரைப்பட இயக்குநராக சீமான் ஈழத்துக்கு வந்திருந்தார். 2,3 நாட்கள் எல்லாளன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கும், சீமான் வந்தார். அங்கே இருந்த நவீன ரக துப்பாக்கிகள் மீது சீமானுக்கு அலாதியான பிரியம் இருந்தது. இதனால் அவற்றை வைத்து போட்டோ எடுக்க வேண்டும் என விரும்பினார். நான் தான் அந்தப் படங்களை எடுத்தேன். அந்தப் படத்தின் ஸ்டில்போட்டோகிராபராக நான் பணியாற்றும் போட்டோக்களும் இருக்கின்றன.
சூட்டிங் போட்டோ எடுத்தது நான்தான்..
பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்த போது எடுத்த படங்கள் என தமிழ்நாட்டில் சீமான் வெளியிட்டிருப்பவை அனைத்தும் என்னால் எல்லாளன் திரைப்பட படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவைதான். அந்தப் படங்களை உற்று நோக்கினால் சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தக் கூடிய தெர்மகோல் சீமானின் பின்னால் இருக்கும். அதேபோல சீமான் துப்பாக்கி ஒன்றை தமது கை இடுக்கில் வைத்திருப்பார். பொதுவாக ஆயுதங்களைக் கையாள்வதற்கு என ஒரு முறை இருக்கிறது. சீமான் பிடித்திருப்பது போல கை இடுக்கில் வைத்துக் கொண்டு எல்லாம் சுட்டுவிடவும் முடியாது. அதேபோல படப்பிடிப்பு நடந்த இடத்தில் ஒரு குண்டு கூட சுடவும் முடியாது. சில கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை ராணுவ முகாம் இருந்ததால் அப்படி பயிற்சி எடுக்கவும் முடியாது.

திரித்து பொய் பேசும் சீமான்
சீமானுக்கு பிரபாகரன் ஆயுதப் பயிற்சி தரவே இல்லை. அதற்கான சூழலும் அப்போது அங்கு இல்லை. அதேநேரத்தில் எல்லாளன் படத்துக்காக தமிழ்நாட்டில் இருந்து வந்து பல மாதங்களாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ்-க்கு இத்தகைய துப்பாக்கி சுடும் வாய்ப்பு தரப்பட்டது. அது பயிற்சி அல்ல. சந்தோஷ்க்கு ஆமைகறியும் ஒரு முறை வழங்கப்பட்டதாக அறிந்தேன். இப்படி ஒளிப்பதிவாளர் சந்தோஷுக்கு நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் தமக்கு நடந்ததாக திரித்து பொய் பேசி வருகிறார் சீமான்.
சீமான் மீது விடுதலைப் புலிகள் அதிருப்தி
அத்துடன் பிரபாகரனுடன் சீமான் சந்தித்தது சில நிமிடங்கள்தான். அப்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் உடன் இருந்தார். அப்போது போட்டோ எடுக்கப்பட்டது உண்மை. ஆனால் அதனை சீமானிடம் தரவே கூடாது என விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியாக சொல்லிவிட்டது. ஏனெனில் சீமான், கொழும்பு வழியாக விமானத்தில் வந்திருந்தார்; மற்றொன்று சீமான் புகழ் விரும்பியாகவே இருக்கிறார் என்பதை விடுதலைப் புலிகள் அந்த சில நாட்களிலேயே உணர்ந்திருந்தனர்; இதனால் தமிழ்நாட்டுக்கு சென்ற உடன் இந்த படங்களை எல்லாம் சீமான் வெளியிடலாம்; இதனால் எல்லாளன் படப்பிடிப்புக்காக தமிழ்நாட்டில் வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணங்களால் சீமானுக்கு இந்த படங்களைத் தரவே கூடாது என்பதில் விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தனர்.

பிரபாகரன் உணவு பரிமாறவே இல்லை
மேலும் சீமானுக்கு பிரபாகரன் உணவு பரிமாறவும் இல்லை; பிரபாகரன் மனைவி மதிவதினி விதம் விதமாக அசைவ உணவுகளை சமைத்துப் போடவும் இல்லை. 2008-ம் ஆண்டு காலத்தில் ஈழத்தின் களச் சூழல் அப்படியானதாகவும் இல்லை. போர் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த தருணம். பிரபாகரன், சீமானை சில நிமிடங்கள்தான் சந்தித்தார்; அதன் பின்னர் வேறு சில முக்கியமான சந்திப்புகளுக்கு சென்றும்விட்டார். சீமான் சொல்வது போல ஒரு மாதமோ, 2 அல்லது 3 மாதமோ ஈழத்தில் தங்கி இருக்கவில்லை. சில நாட்களிலேயே சீமான் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஈழத்தில் தவறு செய்த சீமான் - திருப்பி அனுப்பிய புலிகள்
சீமான் ஈழத்தில் இருந்த போது ஒரு தவறு செய்திருந்தார்; அத்துடன் பிரபாகரனை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டும் என நச்சரித்தும் கொண்டிருந்ததால் அவரை உடனே அங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்பதில்தான் புலிகள் உறுதியாக இருந்தனர். ஆனால் அப்போது இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லாளன் படப்பிடிப்பில் கரும்புலி இளங்கோவாக பாத்திரம் ஏற்று நடித்த புகழ்மாறன் உள்ளிட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர்; இதனால் சீமான் சில நாட்கள் கழித்தே தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாடும் சீமான்
அத்துடன் வீரச்சாவடைந்த புகழ்மாறனுடன் இருக்கும் படத்தை காண்பித்து அவர்தான் தமக்கு மெய்ப்பாதுகாப்பாளராக பிரபாகாரனால் நியமிக்கப்பட்டிருந்தவர் என்றெல்லாம் சீமான் கதை பேசி வருகிறார். தமிழ்நாட்டில் சீமான் பேசி வருவது அத்தனையும் கட்டுக்கதைகள்தான். தற்போது பெரியாரா? பிரபாகரனா? என சீமான் பேசுவது பிரபாகரனை முன்வைத்து நடத்தும் அரசியல் சூதாட்டம். தம்மை புலிகள் யாரும் கேட்கப் போவது இல்லை என்ற போக்கினால் திரித்து பேசிக் கொண்டிருக்கிறார். இது மோசடித்தனமானது. இந்தப் போக்கு தமிழ்த் தேசியத்தில் இருந்து அடிப்படைவாதம் நோக்கியதாக இருக்கிறது. இது ஆபத்தானது.
பிரபாகரனுடன் இருப்பது பொய்யான போட்டோ
பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படங்கள் அனைத்தும் போலியானவை; சித்தரிக்கப்பட்டவை. அந்தப் படங்கள் உண்மையானவை எனில் எப்போது எங்கே எடுக்கப்பட்ட என்ற பதிவுகள் அந்த படங்களில் இருக்க வேண்டும் அல்லவா? அதை சீமான் தரப்பு வெளியிட்டிருக்கலாமே? ஏன் இத்தகைய சர்ச்சை?

சூட்டிங் படங்கள் என நிரூபிக்க தயார்
சீமான் துப்பாக்கியுடன் நிற்கும் படங்கள் அனைத்தும் எல்லாளன் சூட்டிங் ஸ்பாட்டில்தான் எடுக்கப்பட்டன என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க நான் தயாராகவே இருக்கிறேன். அந்த படங்கள் அனைத்தும் எங்கே எப்போது எடுக்கப்பட்டன என்பது டிஜிட்டல் காமிராவில் பதிவாகி இருக்கின்றன. இவ்வாறு அமரதாஸ் தெரிவித்துள்ளார்.
(நன்றி: சன் நியூஸ் செய்தி)
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications