போலி மின்னஞ்சல் வழக்கு: யூடியூபர் மாரிதாசுக்கு டிச.27 வரை நீதிமன்ற காவல்.. எழும்பூர் கோர்ட் உத்தரவு
சென்னை: தனியார் தொலைக்காட்சி அளித்த போலி மின்னஞ்சல் தொடர்பான வழக்கில் மாரிதாஸை டிச. 27 வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மரிதாஸ் என்ற நபர் தனது Maridhas answers என்ற யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்தச் சூழலில், பாலகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன் மரிதாஸை தமிழ்நாடு போலீசார் மதுரையில் வைத்து கைது செய்தனர்.

மாரிதாஸ் கைது
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் காஷ்மீருடன் தமிழ்நாட்டை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட்டை அவர் சிறிது நேரத்திலேயே டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் இந்த ட்வீட் குறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையிலேயே மரிதாஸ் கைது செய்யப்பட்டார். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, சமூக நல்லிணக்கத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கிலும் கைது
இதையடுத்து அவர் தேனி உத்தமபாளையம் கிளைச் சிறையில் மாரிதாஸ் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே அவரை வரும் டிசம்பர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி அளித்த போலி மின்னஞ்சல் தொடர்பான வழக்கிலும் மரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வரும் டிச.27 வரை நீதிமன்ற காவல்
இந்நிலையில், இந்த மோசடி வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, வரும் டிச. 27ஆம் தேதி நீதிமன்ற காவலில் மாரிதாஸை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து காவலர்கள் மாரிதாஸை மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
Recommended Video

பாஜக எதிர்ப்பு
முன்னதாக மரிதாஸ் கைது செய்யப்பட்டதற்குத் தமிழ்நாடு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், " தேசியவாதி ஒருவர், கருத்துச் சுதந்திரத்திற்கு அருகில் ஒரு கருத்தைச் சொல்லும் போது அதைத் தேவையின்றி பிரச்சினை ஆக்குகிறார்கள். மாரிதாஸ் பேசியதில் என்ன தவறு? மரிதாஸ் ஜாமீன் தொடர்பான வழக்கிலும் கூட இதைப் பேச்சு சுதந்திரம் என்றே நீதிபதி குறிப்பிட்டார். மாரிதாஸ் டெலிட் செய்த ட்வீட்டில் என்ன வார்த்தை தவறு? இதை விட மோசமான பல ட்வீட்கள் உள்ளன" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications