உங்க பஞ்சாயத்து தீராதா? டென்ஷனான எடப்பாடி! எம்.பி மீது கேபிஎம் புகார்.. வடக்கில் ஈகோ யுத்தம்! ஆஹா!
சென்னை : எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் இடையே ஈகோ யுத்தம் உச்சத்தை எட்டி இருப்பதாகவும், இதுதொடர்பாக பஞ்சாயத்து மீண்டும் ஈபிஎஸ்ஸிடம் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நீண்ட நாட்களாகவே வடக்கில் ஆதிக்கம் செலுத்துவது யார் என்ற சைலண்ட் வார் சிவி சண்முகம், கேபி முனுசாமி இடையே அரங்கேறி வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் ஓவர்டேக் செய்ய முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், தான் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும், அதற்குப் பின்னணியில் சிவி சண்முகம் இருக்கிறார் என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் புகாரை கொண்டு போயிருக்கிறார் கேபி முனுசாமி.
ஆனால், அதனை எடப்பாடி பழனிசாமி பெரிதாக பொருட்படுத்தாததால், கேபி முனுசாமியின் ஆதரவாளர்கள் வெதும்பியுள்ளனராம்.

கே.பி.முனுசாமி
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே உச்கட்ட மோதல் ஏற்பட்டது. இதனால், ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து விலகி தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு பக்கபலமாக இருந்தவர்களில் முக்கியப் பங்காற்றிய கே.பி.முனுசாமி இந்த முறை எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி அவருக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியையும் வழங்கியுள்ளார்.

ஈகோ யுத்தம்
ஓபிஎஸ்ஸால் பதவிகளைப் பெற்றுவிட்டு, துரோகம் செய்துவிட்டதாக முனுசாமியை ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பின் ஆவேசக் கணைகளை தாங்கி வரும் முனுசாமிக்கு, எடப்பாடி பழனிசாமி அணியிலும் நிறைய குடைச்சல்கள் கொடுக்கப்படுகின்றனவாம். குறிப்பாக, ஈபிஎஸ் அணியில் இருக்கும் சி.வி.சண்முகத்துக்கும் கே.பி.முனுசாமிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இருவருக்கும் இடையேயான ஈகோ பிரச்சனை ஜூன் 23 அன்று பொதுக்குழு மேடையிலேயே வெடித்தது குறிப்பிடத்தக்கது.

சூடான புள்ளிகள்
பொதுக்குழு கூட்டத்தின்போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமியிடம் கடுமையாக விவாதம் செய்தார். இதனால் மேடையிலேயே இருவரும் சூடானதால் லேசாக சலசலப்பு ஏற்பட்டது. ஓபிஎஸ் உடன் ஒருபக்கம் தகராறு என்றால் என்ன இவர்கள் மேடையிலேயே அடித்துக் கொள்கிறார்களே என அதிமுகவினரே அதிர்ந்து போயினர்.

முனுசாமி ஆதங்கம்
எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அப்போது, அவரோடு எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகமும் சென்றிருந்தனர். கட்சியின் துணை பொதுச்செயலாளரான தன்னை அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு அழைத்து செல்லாமல் அமைப்புச் செயலாளராக உள்ள சி.வி.சண்முகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தன்னை புறக்கணிப்பதாகவும் கேபி முனுசாமி ஆதங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

அப்செட்?
கேபி முனுசாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் கூட்டத்திலும் அவர் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் அணிக்கு அவர் செல்ல இருப்பதாக தகவல்கள் பரபரத்தன. பின்னர் கேபி முனுசாமியே இந்தச் சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

சி.வி.சண்முகம் vs முனுசாமி
சி.வி.சண்முகம் vs முனுசாமி மோதல் வெட்டவெளிச்சமான நிலையில், அதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சி.வி.சண்முகம் என்னுடைய தம்பியைப் போன்றவர். அவர் மீது எனக்கு எந்த சூழ்நிலையிலும் கருத்து வேறுபாடு வராது. நான் வயதில், அனுபவத்தில் மூத்தவன், என்னைப் போலவே உணர்வுள்ள உணர்ச்சிமிக்க தொண்டன் சி.வி.சண்முகம்.
இந்த இயக்கத்துக்காகவே அர்ப்பணித்துக்கொண்டிருக்கிற குடும்பம் அவரின் குடும்பம். எப்படியாவது, சிண்டு முடித்து இந்த இயக்கத்தின் வேகத்தைத் தடுக்க விஷமிகள் செய்யும் சித்து விளையாட்டு இது என்றார்.

மீண்டும் பஞ்சாயத்து
ஆனாலும், வட தமிழகத்தில் குறிப்பாக வன்னியர் சமூக மக்களின் மத்தியில் அதிமுகவின் முகமாக அறியப்படுவது யார் என்பதில் இருவருக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து வருவதாகவே கூறப்பட்டது. இந்நிலையில் தான் மீண்டும் இவர்களுக்கு இடையேயான பஞ்சாயத்து வெடித்துக் கிளம்பி இருக்கிறதாம். இருவருக்கும் இடையேயான பிரச்சனையால், எடப்பாடி பழனிசாமியே கொஞ்சம் நொந்து போயிருக்கிறாராம்.

பேப்பர் பிரச்சனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 6ஆம் தேதி அதிமுக 51ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்தப் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் மேற்கொண்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற இந்தப் பொதுக்கூட்டம் பற்றிய செய்தி, அதிமுக நாளேடான 'நமது அம்மா'வில் வரவே இல்லையாம்.

முனுசாமி வேதனை
அதேசமயம், சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் பங்கேற்ற பொதுக்கூட்டம் பற்றி கால் பக்கத்தில் நமது அம்மா நாளிதழில் செய்தி வந்திருந்ததாம். இதைக் கவனித்த கேபி முனுசாமி, சி.வி.சண்முகத்திற்கு நெருக்கமானவர் நமது அம்மா நாளிதழில் இருப்பதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தையே புறக்கணிக்கின்றனர். நீங்கள் பங்கேற்ற நிகழ்வை கூட போடவில்லை. சிவி சண்முகம் செய்தி கால் பக்கத்தில் வருகிறது, இப்படியே போனால், அது கட்சி பத்திரிகையாக இருக்காது என ஈபிஎஸ்ஸிடம் வெதும்பியுள்ளார்.

எத்தனை பஞ்சாயத்துப்பா
எடப்பாடி பழனிசாமி, முனுசாமியின் புலம்பலுக்கு ஓரிரு வார்த்தைகளிலேயே மேம்போக்காக பதிலளித்துவிட்டு கண்டுகொள்ளவில்லையாம். இதனால், மேலும் சூடாகியுள்ளார் முனுசாமி என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதேசமயம், ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்கும்போது, இப்படி அணிக்குள்ளேயே அடித்துக்கொண்டால் எப்படி என எடப்பாடி பழனிசாமியும், முனுசாமி, சண்முகம் பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம் அப்செட்டாக பேசியுள்ளாராம்.












Click it and Unblock the Notifications