கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? நாளை மறுநாள் தவெக மாநாடு! இன்று தேர்தல் ஆணையம் கொடுத்த சர்ப்ரைஸ்!?
சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் சுமார் 39 கட்சிகளைக் கொண்ட பட்டியலை, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள நிலையில், இந்த பட்டியலில் புதிதாக பதிவு செய்யப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு வசூலிலும் ரசிகர் பட்டாளத்திலும் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் விஜய் அடுத்ததாக அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே அரசியலை நோக்கியே அவரது நகர்வுகள் இருந்திருக்கிறது.

ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியது, கிளைக் கழக நிர்வாகிகள் வரை நியமனம் செய்தது, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சியினரை போட்டியிட வைத்தது என விஜய் மறைமுகமாக அரசியல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கூறப்பட்டது. சொன்னது போலவே பிப்ரவரி மாதத்தில் அரசியல் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததோடு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரையும் அறிவித்தார். அதற்குப் பிறகு ஆலோசனைக் கூட்டம், கோட் சூட்டிங், மாணவர்கள் சந்திப்பு என பிசியாக இருந்த அவர் 2026 தேர்தலில் களமிறங்குவது உறுதி என அறிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பல இடங்கள் பார்த்த பிறகு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடக்க இருப்பதாகவும் அதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் மாநாட்டு தேதி ஒத்தி வைக்கப்பட்டு, தற்போது நாளை மறுநாள் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி -சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட இறுதி அடைந்துள்ள நிலையில், கட்சியினருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்தை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளதாக கூறப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதமே தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அங்கீகார உத்தரவு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்திடம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் விண்ணப்பித்திருந்தார். தொடர்ந்து கடந்த மாதம் அதை தேர்தல் ஆணையம் சட்டபூர்வமாக பரிசிலித்துள்ளதாக செப்டம்பர் எட்டாம் தேதியே விஜய் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்குப் பிறகு ஏராளமான விண்ணப்பங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில் 39 கட்சிகள் பதிவு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. குறிப்பாக 39 அரசியல் கட்சிகளின் பட்டியலில் 26 ஆவது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் இடம் பெற்றுள்ளது. மேலும் சென்னை பனையூர் என்ற முகவரியில் அந்த கட்சி பதிவு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மாநாடு நடக்கும் இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு தமிழக வெற்றி கழக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications