சோனமுத்தா போச்சா! டெபாசிட் காலியாமே! கட்டுத் தொகை என்றால் என்ன? எப்படி திரும்ப கிடைக்கும்! விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது "டெபாசிட் இழந்தார்", "டெபாசிட் காலியானது" என்ற வார்த்தைகள் அடிக்கடி செய்திகளில் கேட்டிருப்பீர்கள் அல்லவா?. பொதுவாக, தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள், யார் தோல்வியடைந்தார்கள் என்பது பொதுமக்களுக்கு எளிதாக புரியும் விஷயம். ஆனால் "டெபாசிட் இழப்பு" என்றால் என்ன, எப்போது அது நடக்கும், எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது குறித்து பலருக்கும் முழுமையான தகவல் தெரியாது என்பது தான் உண்மை. இந்த கட்டுரையில் அதுகுறித்து தெளிவாகப் பார்க்கலாம்..

ஒரு நபர் தேர்தலில் போட்டியிட விரும்பினால், முதலில் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த வேட்புமனுவுடன் சேர்த்து ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இந்த வைப்புத் தொகை கட்டாயமாக நிர்ணயிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம், உண்மையாக போட்டியிடும் விருப்பமுள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க வேண்டும் என்பதுதான்.

Election Deposit

தேவையில்லாமல் அதிகமானோர் பெயர் மட்டும் பதிவு செய்து தேர்தலில் நிற்பதைத் தவிர்க்கவும், தேர்தல் நடைமுறைகள் சீராக நடைபெறவும் இந்த தொகை ஒரு கட்டுப்பாட்டு முறையாக செயல்படுகிறது. இந்த வைப்புத் தொகை தேர்தல் வகைக்கு ஏற்ப மாறுபடும்.

தேர்தல் டெபாசிட்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பொதுப்பிரிவு வேட்பாளர்கள் ரூ.25,000 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு சலுகையாக ரூ.12,500 மட்டும் செலுத்தினால் போதும். அதேபோல் சட்டமன்றத் தேர்தலில் பொதுப்பிரிவு வேட்பாளர்கள் ரூ.10,000 செலுத்த வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் ரூ.5,000 செலுத்தினால் போதும்.

டெபாசிட் தொகை

உள்ளாட்சி தேர்தல்களிலும் இதேபோன்ற விதிமுறைகள் உள்ளன. பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு பொதுப்பிரிவு வேட்பாளர்கள் ரூ.1,000 செலுத்த வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் ரூ.500 செலுத்தினால் போதும். நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு பொதுப்பிரிவு வேட்பாளர்கள் ரூ.2,000 செலுத்த வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் ரூ.1,000 செலுத்த வேண்டும். மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு பொதுப்பிரிவு வேட்பாளர்கள் ரூ.4,000 செலுத்த வேண்டும். பட்டியலின மற்றும் பழங்குடியின வேட்பாளர்கள் ரூ.2,000 செலுத்த வேண்டும்.

ஆறில் ஒரு பங்கு வாக்கு

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் குறைந்தபட்சமாக ஒரு அளவு வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதாவது, மொத்தமாக பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். இந்த அளவிற்கு குறைவாக வாக்குகள் கிடைத்தால், அவர் செலுத்திய வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படாது. இதுவே "டெபாசிட் இழப்பு" என்று அழைக்கப்படுகிறது.

வைப்புத் தொகை

உதாரணமாக, ஒரு தொகுதியில் மொத்தம் 60,000 வாக்குகள் பதிவாகியிருந்தால், அந்த வேட்பாளர் குறைந்தது 10,000 வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அதற்கு குறைவாக வாக்குகள் கிடைத்தால், அவர் கட்டிய வைப்புத் தொகை திரும்ப கிடைக்காது. அந்த தொகை அரசு வசமாகி விடும். அதே நேரத்தில், ஒரு வேட்பாளர் தேவையான அளவு வாக்குகளைப் பெற்றிருந்தால், அவர் கட்டிய வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும். மேலும், வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தாலும், கடைசி தேதிக்குள் வேட்புமனுவை வாபஸ் பெற்றிருந்தாலும், அல்லது தேர்தல் நடைபெறும் முன்பே வேட்பாளர் மரணமடைந்திருந்தாலும் அந்த தொகை திரும்ப வழங்கப்படும் என்ற விதியும் நடைமுறையில் உள்ளது.

டெபாசிட் இழப்பு

டெபாசிட் இழப்பு என்பது வெறும் பணம் இழப்பை மட்டும் குறிக்கவில்லை. அது ஒரு வேட்பாளரின் மக்கள் ஆதரவு எவ்வளவு குறைவாக இருந்தது என்பதையும் காட்டும் ஒரு முக்கியமான அடையாளமாக கருதப்படுகிறது. அதனால் தான் தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது யார் யார் டெபாசிட் இழந்தார்கள் என்பது அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் அதிகமாக பேசப்படும் முக்கிய விஷயமாக மாறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+