Election Exclusive: அன்னைக்கே சொன்னாரே அன்புமணி.. திமுகவில் சேலம் அருள்? ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை! அப்போ ராமதாஸ்?
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு கட்சிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், ராமதாஸ் - சசிகலா கூட்டணி அறிவிப்பைத் தொடர்ந்து, பாமக தரப்பில் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சேலம் பாமக எம்எல்ஏ அருள் திமுகவில் இணையலாம் என்ற தகவல் தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் இந்த முறை நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தலைமையில் கடும் போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக இடம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பினர் தனி பாதையைத் தேர்வு செய்து பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சசிகலா பொதுச் செயலாளராக சேர்ந்திருக்கும் அஇபுதமமுக உடன் ராமதாஸ் கூட்டணி அமைத்ததாக அறிவித்தது பரபரப்பைக் கிளப்பியது.

ராமதாஸ் சசிகலா கூட்டணி
இந்த கூட்டணி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த முடிவுக்கு பாமக கட்சிக்குள் உள்ள சில நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் முக்கியமாக, சேலம் மேற்கு தொகுதியைச் சேர்ந்த பாமக எம்எல்ஏ அருள். கடந்த காலங்களில் அன்புமணி ராமதாஸ் மீது விமர்சன நிலைப்பாட்டில் இருந்த அருள், ராமதாஸ் மீது நம்பிக்கை கொண்ட தீவிர ஆதரவாளராக கருதப்பட்டு வந்தார்.
சேலம் அருள்
ஆனால் சசிகலாவுடன் கூட்டணி அமைத்தது அவருக்கு விருப்பமில்லாத முடிவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய அவர், சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதில் எனக்கோ, ஜி.கே. மணிக்கோ விருப்பமில்லை. கட்சியில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகளும் இதே கருத்தில் உள்ளனர். இந்த கூட்டணி குறித்து கட்சி மேலிடத்தில் நான் அதிருப்தி தெரிவித்துள்ளேன். இருப்பினும், ராமதாஸை விட்டு வேறு கட்சிக்கு செல்லும் எண்ணம் இல்லை. கடைசி வரை அவருடன் இருப்பேன்" என்று தெரிவித்திருந்தார்.
எம்எல்ஏ அருள் திமுகவில்?
இந்நிலையில், பரபரப்பு தகவல் ஒன்று சேலம் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது, சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்திருப்பதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, சேலம் பாமக எம்எல்ஏ அருள் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் வரும் திங்கட்கிழமை இணையக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ரகசிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ரகசிய ஆலோசனை
மேலும், திமுகவில் இணைந்த பிறகு மீண்டும் சேலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த கோரிக்கையை திமுக தலைமை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் உண்மையாகி, அருள் திமுகவில் இணைந்தால் அது ராமதாஸ் தரப்புக்கு ஒரு பெரிய பின்னடைவு என பார்க்கப்படுகிறது.
பாமக வாக்கு வங்கி
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் பாமக வாக்கு வங்கியில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்ற ராமதாஸ் - சசிகலா கூட்டணி அறிவிப்பைத் தொடர்ந்து உருவாகியுள்ள இந்த புதிய அரசியல் பரபரப்பு, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதற்கான இன்னொரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அருள் திமுக ஆதரவாளராக இருப்பதாகவும், பாமக பிரச்சினைக்கு அவர் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications