செம.. அக்கவுண்டுக்கே வரும் ரூ.1000.. வீடு தேடி மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்
சென்னை: தற்போது நடைபெறும் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் விடுபட்டு போன தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும், முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
அரசு சேவைகளை மக்களின் இருப்பிடத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை கடந்த 15ஆம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல் கன்னிவாடி பேரூராட்சி மற்றும் தேவரப்பன்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டால் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 1.60 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுவில் சுமார் 1.16 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் விடுபட்டு போன தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
மேலும். இம்முகாமில் மனு அளிக்கும் 60 வயதினை தாண்டியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.5.00 இலட்சம் சிகிச்சை மேற்கொள்ளலாம். உங்கள் மனுவினை முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி வைத்தால் ரூ.30 இலட்சம் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். எனவே, முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான தொகை அரசு வழங்கும்.
அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 18 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை தொடங்கி வைத்துள்ளார்கள்.
கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக பொதுமக்கள் யாரையும் தேடிச் சென்று அலைய வேண்டியது இல்லை. உங்கள் கிராமங்களில் நடத்தப்படும் முகாம்களில் மனுக்கள் அளிக்க வேண்டும். இத்திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும். இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது மக்களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட இந்த அரசு என்றென்றும் தயாராக உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications