தகவலை கசியவிட்ட சென்னை மாநகராட்சி வெப்சைட்.. சரியாக என்ட்ரி கொடுத்த பிரான்ஸ் ஹேக்கர் எலியட்
சென்னை: அவசர பாஸ் வசதிக்காக, சென்னை மாநகராட்சி உருவாக்கிய வெப்சைட் பல தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பில்லாமல் வெளியே கசிய விட்ட தகவலை, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, உலகின் முன்னணி டெக்னாலஜி வல்லுநரும், பிரபல ஹேக்கருமான, எலியட் ஆல்டர்சன் கண்டுபிடித்து கூறியுள்ளார். இதையடுத்து அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், இ-பாஸ் பெற்றுக்கொண்டுதான், பிற மாவட்டங்கள் அல்லது பிற மாநிலங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் இதற்காக ஒரு வெப்சைட் துவங்கப்பட்டது. அவசர தேவைகளுக்காக பாஸ் பெற விரும்புவோர் ஆன்லைன் மூலமாக தங்களது விபரங்களை தெரிவித்து விட்டு பாஸ் பெற முடியும்.
|
சென்னை மாநகராட்சி வெப்சைட்
ஆனால் இந்த வெப்சைட்டில் மிகப்பெரிய பாதுகாப்பு பிரச்சினை இருந்ததை கண்டுபிடித்துள்ளார் எலியட் ஆல்டர்சன். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி கூறுகையில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின், ஆதார் எண் உட்பட்ட தனிப்பட்ட விவரங்கள் மற்றவர்களால் பார்க்கும் அளவுக்கு பாதுகாப்பற்ற தன்மையுடன் இருக்கின்றது. உடனடியாக என்னை தொடர்பு கொள்ளுங்கள். சரி செய்து தருகிறேன். இவ்வாறு ட்விட்டர் பதிவில் எலியட் தெரிவித்திருந்தார்.
|
மாநகராட்சி
இதன் பிறகு மற்றொரு பதிவில், தன்னார்வலர்களின் தனிப்பட்ட விபரங்களும் இந்த வெப்சைட் மூலமாக வெளியே தெரிகிறது என்ற அதிர்ச்சித் தகவலையும் அவர் கூறினார். இதன் பிறகு சற்று நேரம் கழித்து, சென்னை மாநகராட்சி இந்த விஷயத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கிறது, அவர்கள் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்திருந்தார். இதன்பிறகு பிரச்சனை சரியாகிவிட்டது என்றும், அவர் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
|
ஆதார்
இதன் மூலம், சென்னை மாநகராட்சி இணையதளத்தில் ஏற்பட்ட ரகசிய தகவல் கசிவு சரி செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே, 2018ஆம் ஆண்டு, ஆதார் ஆண்ட்ராய்டு செயலியில் பெரும் பாதுகாப்பு குறைபாடு இருப்பதை சுட்டிக்காட்டி இருந்தார். மூன்றாவது நபர் இணையதளங்கள் இந்த தகவல்களை எடுத்துக்கொண்டு பயன்படுத்தக் கூடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதன் மூலம் நாடு முழுக்க இவர் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கிய சேது
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைப் போலவே, ஆரோக்கிய சேது என்ற மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு கொண்டதாக இருக்கலாம் என்ற கருத்து தெரிவித்துள்ளார் எலியட். இருப்பினும் எந்த மாதிரி பாதுகாப்பு குறைபாடு என்பது பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதை மத்திய அரசு மறுத்துள்ளது. ஆரோக்கிய சேது ஆப் முழு பாதுகாப்புடன் இருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.