முடிஞ்சு போன கட்சி அதிமுக.. இப்போ திமுக-தவெக இடையேதான் போட்டியே.. ஆதவ் அர்ஜுனா பேச்சு
சென்னை: "பாஜகவுடன் கூட்டணி வைத்ததை சொல்லிச் சொல்லியே அதிமுகவை முடிச்சு வைச்சிட்டாங்க. இப்போது திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டியே.. யார் என்று இந்த தேர்தலில் பார்த்து விடலாம்" எனப் பேசியுள்ளார் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று (நவம்பர் 5) நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, திமுகவை கடுமையாக விமர்சித்ததோடு அதிமுகவையும் சீண்டியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "கரூருக்கு விஜய் ஏன் போகவில்லை என்கிற விமர்சனம் உள்ளது. அதற்கு நான் பதில் சொல்கிறேன், கரூர் காவல்துறை வினோதமான காவல்துறை. 8 நாட்களுக்கு முன்பு, அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்தோம். காவல்துறையை நாங்கள் நம்பியது தான் ஒரே தவறு. காவல்துறையை நம்பி தவறு செய்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.
பத்திரமாக இந்த தெருவில் வாருங்கள் காவல்துறை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர். விஜய் வருவது தொடர்ந்து நேரலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களுடைய பாதுகாப்பு குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறோம். திடீரென திருச்செந்தூர் கோவிலில் இருபது லட்சம் பேர் கூடினால் எப்படி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமோ.. அதேபோன்று பாதுகாப்பு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
என்னை கைது செய்யுங்கள், யாரை வேண்டுமென்றாலும் கைது செய்யுங்கள். ஆனால் மக்களின் உயிரை வைத்து விளையாடாதீர்கள். இதுதான் கேவலமான எண்ணம். மக்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அதை வைத்து கட்சி இவர்கள் மீது பழி போடலாம் என செய்கிறார்கள்.
உங்களிடம் பாவ மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன், எதிர்க்கட்சியாக இருந்த திமுகவுக்கு 10 ஆண்டுகள் வேலை பார்த்தற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், கடந்த சட்டமன்ற தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே எங்கள் தலைவர், உங்களுக்கு நன்றிக்கடன் இல்லையா?
தமிழகத்தில் பேசிப் பேசி வளர்ந்த கட்சி திமுக. தமிழகத்தில் முதல்முறையாக மவுன புரட்சியை விஜய் உருவாக்கியிருக்கிறார். காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், சூழ்ச்சி என்றே தெரியாத எங்கள் தலைவர் காவல்துறைக்கு நன்றி சொல்வாரா? எங்களுக்கு சூழ்ச்சி தெரியாது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். நல்லது செய்வதற்காகத்தான் இந்த கட்சிக்கு வந்திருக்கிறோம். எங்களுக்கு உங்கள் சூழ்ச்சிகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் தூக்கி எறியத் தெரியும். 2026இல் இந்த சூழ்ச்சியை அவர் தூக்கியெறிவார் விஜய்." எனப் பேசினார் ஆதவ் அர்ஜுனா.
இவர்களை யார் எதிர்கொண்டாலும் சூழ்ச்சியால் அடிக்குறாங்க. எம்ஜியார், ஜெயலலிதாவிடம் இப்படித்தான் செய்தார்கள். 5 வருஷத்துக்கு முன்னாடி மாற்றம்னு சொன்னவங்க எல்லாம்.. இன்னைக்கு அவங்க பக்கம் போயிட்டாங்க. பாஜகவுடன் கூட்டணி வைத்ததை சொல்லிச் சொல்லியே அதிமுகவை திமுக முடிச்சு வைச்சிட்டாங்க. இப்போது திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டியே.. யார் என்று இந்த தேர்தலில் பார்த்து விடலாம்" எனப் பேசியுள்ளார் ஆதவ் அர்ஜுனா.
முன்பும் பல முறை அதிமுகவை விமர்சித்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. "அதிமுக பாஜகவுடன் சேர்ந்தவுடனேயே அது தவறு என நாங்கள் அறிக்கை கொடுத்துவிட்டோம். மக்களே அதிமுகவுக்கு தண்டனை கொடுத்துவிட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்? அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி, பல தேர்தல்களில் தோல்வி அடைந்த ஒரு கட்சியுடன் நாங்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்." என்று பேசியிருந்தார் ஆதவ் அர்ஜுனா.
மேலும், ஆதவ் அர்னாஜுனாவும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் புல்வெளியில் பேசியபடியே நடந்து செல்லும் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் ஆதவ் அர்ஜுனா, "அண்ணாமலையாச்சும் 10 பேரை வச்சிக்கிட்டு, தேர்தலில் நின்னு 18, 20 சதவீதம் வாக்கு வங்கி வச்சியிருக்காரு, இங்கே எடப்பாடியை நம்பி கூட்டணிக்கு யாரும் வர்ற மாதிரி தெரியல, பாஜகவே கூட்டணியில் இருந்து கழற்றி விடும்" என்று பேசினார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications