ஜாமீனில் வெளியே வந்த ஜெயக்குமார்.. வீட்டுக்கு ஒரே நேரத்தில் விரைந்த எடப்பாடி, ஓபிஎஸ்! இணைந்த கரங்கள்
சென்னை: புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக நேரில் சென்று சந்தித்தனர்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது சென்னை ராயபுரத்தில் திமுக ஆதரவாளர் நரேஷ் என்பவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி அவரை பிடித்து அரை நிர்வாணப்படுத்தி ஜெயக்குமார் அதிமுக ஆதரவாளர்களுடன் தாக்குதலில் ஈடுபட்டார். இதனை தனது முகநூல் பக்கத்திலும் ஜெயக்குமார் நேரடி ஒளிபரப்பு செய்தார்.

வைரலான ஜெயக்குமார் வீடியோ
பிடிப்பட்ட நரேஷின் சட்டையை ஜெயக்குமார் கழற்ற சொல்வதும், அவரது கையை பின்னால் கட்டி அரை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில், ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் நரேஷ் புகாரளித்தார்.

ஜெயக்குமார் கைது
அதன் அடிப்படையில் 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெயக்குமாரை பிப்ரவரி 21 ஆம் தேதி அவரது வீட்டுக்கு சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். அத்துடன் அவர் மீது ஏற்கனவே நிலுவையில் இருந்த 2 வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

அதிமுகவினர் போராட்டம்
ஜெயக்குமார் கைதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் திமுகவை கண்டித்து அதிமுக தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். கள்ள ஓட்டு போட வந்தவரை பிடித்தது குற்றமா என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

ஜாமீனில் ஜெயக்குமார் விடுவிப்பு
இந்த நிலையில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று அவரை மூன்று வழக்குகளிலிருந்தும் ஜாமீனில் விடுவித்தது. இதனை தொடர்ந்து இன்று காலை சிறையிலிருந்து வெளியே வந்த ஜெயக்குமாரை அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

ஒன்றாக சந்தித்த ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்
பின்னர் தனது பட்டினப்பாக்கம் வீட்டுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் சிறையில் அவர் நடத்தப்பட்ட விதம் குறித்து கேட்டறிந்த தலைவர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் சென்றது ஏன்?
சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மோதல் இருந்து வந்ததாக பேசப்பட்டு வந்த நிலையில், இருவரும் ஒன்றாக சென்று ஜெயக்குமாரை சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications