திண்டுக்கல், திருப்பத்தூர், மருங்காபுரி, மதுரை கிழக்கு வரிசையில் சரித்திர சம்பவமாகுமா ஈரோடு கிழக்கு?
தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தல்கள், இந்த இடைத்தேர்தல்கள் எப்படியான வரலாற்று திருப்பங்களை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை விவரிக்கிறது இந்த செய்திக் கட்டுரை
சென்னை: தமிழ்நாட்டு அரசியலில் சட்டசபை, லோக்சபா தொகுதி இடைத்தேர்தல்கள் பெரும்பாலும் திருப்புமுனையை தந்து சரித்திரத்தில் இடம்பெற்றவையாகவே இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியும் இடம்பெறும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த அரசியல் தலைவர் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தேமுதிக, நாம் தமிழர் தனித்தே போட்டியிடுகின்றன.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் என்றாலே திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் நினைவுக்கு வரும். 1972-ம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய ஓராண்டில் நடைபெற்றது. திண்டுக்கல் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் என்எஸ்வி சித்தன், எம்ஜிஆரின் அதிமுக சார்பாக மாயத்தேவர் நிறுத்தப்பட்டனர். அப்போதுதான் தமிழ்நாடு தேர்தல் களத்தில் இரட்டை இலை அதிமுகவுக்கு என அறிமுகமானது. இத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றியை பெற்றது. 2-வது இடம் ஸ்தாபன காங்கிரஸுக்கும் 3-வது இடம் ஆட்சியில் இருந்த திமுகவுக்கும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 1974-ல் கோவை மேற்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதிலும் எம்ஜிஆரின் அதிமுகவே வென்றது. பின்னர் 1977-ல் சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுக வென்றது. எம்ஜிஆர் மறையும் வரை சட்டசபை தேர்தலில் வென்று திமுகவால் ஆட்சி அமைக்கவே முடியாமல் போனது.
1980-ல் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் வென்றார். அப்போது திமுக- காங்கிரஸ் உறவில் விரிசல் விழுந்த தருணம். திருப்பத்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. அபோது காங்கிரஸ் வேட்பாளரை ஆளும் அதிமுக ஆதரித்து அமோக வெற்றியை பெற்றுத் தந்தது. அன்று முதல் எம்ஜிஆர் மறையும் வரை அதிமுக- காங்கிரஸ் கூட்டணி மிக மிக வலிமையாக இருந்தது.
1987-ல் எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக சிதறியது. அப்போது நடந்த தேர்தலில் திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. இத்தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவின் ஜானகி, ஜெயலலிதா அணிகள் இணைந்தன. முடக்கப்பட்ட இரட்டை இலை மீட்கப்பட்ட தருணம். மருங்காபுரி, மதுரை கிழக்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்.. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக மிகப் பெரும் வெற்றியை பெற்றும் அதிமுகவும் எம்ஜிஆரின் இரட்டை இலை சின்னமும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதை பிரகடனம் செய்தது.

2009-ல் திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. திருமங்கலம் இடைத்தேர்தல் என்பது வரலாற்றில் இல்லாத வகையில் பெரும் சர்ச்சையானது. இன்றைக்கு வாக்காளர்களுக்கு பணத்தை அள்ளி தரக் கூடிய நடைமுறையை ஊக்கப்படுத்திய முதல் இடைத்தேர்தல் திருமங்கலம் என்ற கறை உருவானது இத்தேர்தலில்தான்.
இப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல். இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஜெயிக்க வைக்க ஆளும் திமுக 11 அமைச்சர்களை கொண்ட பெரும் படையை களமிறக்கி இருக்கிறது .அதிமுகவோ இரு அணிகளாக பிளவுபட்டு நிற்கிறது. இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற அசாதாரண நிலை. இதனால் சரித்திரத்தின் பக்கங்களைப் போல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலும் சரித்திர சம்பவமாக இருக்குமா? என்பது பொதுவான எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications