"இன்னிக்கு கட்சி ஆரம்பிச்சவன்லாம் அடுத்த முதல்வரா?” - சீண்டிய ஸ்டாலின் - பரபரக்கும் அரசியல் களம்!
சென்னை : "இன்றைக்கு கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதல்வர் எனச் சொல்கிறார்கள்" என முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் யாரை குறிப்பிட்டு இப்படு பேசினார் என நெட்டிசன்கள் சூடாக பட்டி மன்றமே நடத்தத் தொடங்கும் அளவுக்கு இந்தப் பேச்சு கவனிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவில் திமுக தொடங்கப்பட்டது முதல் வரலாற்றைக் குறிப்பிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், புதிதாக அரசியலுக்குள் வந்தவர்களை இவ்வாறு சாடியுள்ளார்.

கருணாநிதிக்கு விழா
முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 99வது பிறந்த நாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'வேருக்கு விழா' என்ற தலைப்பில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் திமுகவின் மூத்த தொண்டர்களுக்கு பொற்கிழி மற்றும் புத்தாடைகளை வழங்கிப் பெருமைப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வேராக இருக்கும் கருணாநிதி
இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "திமுக தொண்டர்களை நம் தலைவர் கருணாநிதி வேராக இருந்து இயக்கிக்கொண்டு இருக்கிறார். மூத்த தொண்டர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக அல்ல, அவர்களைப் பெருமைப்படுத்தவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளை இன்னும் வேகமாக ஆற்றிட இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கழக முன்னோடிகளுக்கு சிறப்பு செய்யப்படும். கலைஞர் நம்மிடத்தில் இல்லை என்றாலும் அவருடைய உணர்வுகள் நம்மிடம் எப்போது உள்ளது.

கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் முதல்வரா
ஆட்சியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்கிற நோக்கில் திமுகவை பேரறிஞர் அண்ணா உருவாக்கினார். 1949ல் திமுகவை தொடங்கும்போதே முதலமைச்சர் ஆவோம் என்று கூறிவிட்டு கட்சியை தொடங்கவில்லை. ஆனால், இன்று கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதல்வர் என கூறி வரும் காட்சியைப் பார்க்கிறோம். கட்சி துவங்கி 8 வருடத்திற்கு திமுக எந்த தேர்தல்களையும் சந்திக்கவில்லை. 8 ஆண்டுகளுக்கு பிறகு 1957 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக தேர்தலை சந்தித்து 15 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக சட்டமன்றத்தில் நுழைந்தோம்.

ஆட்சிக்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல
ஆட்சியமைக்க வேண்டும் என உருவாக்கப்பட்ட இயக்கமல்ல. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றே பேரறிஞர் அண்ணா இந்த இயக்கத்தை தொடங்கினார். 1957ல் 15 உறுப்பினர்களோடு சட்டமன்றத்தில் நுழைந்தோம், 1962-ல் எதிர்கட்சியாக உருவெடுத்து, 1967-ல் ஆட்சியை பிடித்தோம். ஆட்சியமைத்த ஒன்றரை ஆண்டுகளில் அண்ணா மறைவிற்கு பிறகு கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றார். 1971ஆம் ஆண்டு 184 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய பெரும்பான்மையோடு ஆட்சி பிடித்தோம். இதுவரை அந்த வரலாற்றை யாரும் முறியடிக்க முடியவில்லை.

ஆட்சியே போனாலும் பரவாயில்லை
ஆட்சியே போனாலும் பரவாயில்லை என ஜனநாயகத்திற்காக, நெருக்கடி நிலையை எதிர்ப்போம் என தீர்மானம் போட்டவர் கலைஞர். தீர்மானம் போடப்பட்ட அடுத்த நாளே ஆட்சியே கலைக்கப்பட்டது. மிசாவில் நான் உட்பட பல பேர் கைது செய்யப்பட்டோம். நான், முரசொலி மாறன் உள்ளிட்ட பல பேர் சிறையில் கொடுமைகளை சந்தித்தோம். 1976-ல் ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர் 13 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதனை தொடர்ந்து 1989 தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கை தமிழர்களுக்கு உதவியதாக 2 ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்டது.

எவ்வளவு சோதனைகள் வந்தாலும்
தற்போது ஆறாவது முறையாக 2021ல் ஆட்சி அமைத்து மக்கள் பணியாற்றி வருகிறோம். இப்படி பல மேடு பள்ளங்களை பார்த்து வளர்ந்த கழகம் இது. எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதை மனப்பூர்வமான ஏற்று செயல்படும் வல்லமை திமுக முன்னோடிகளை பார்க்கும்போது வருகிறது. எனவேதான், முன்னோடிகளுக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது." என உரையாற்றினார்.

முதல்வர் பேச்சால் பரபர
"இன்றைக்கு கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதல்வர் எனச் சொல்லும் காட்சியைப் பார்க்கிறோம். ஆனால், மக்களுக்குப் பணியாற்றப் போகிறோம் எனச் சொல்லி தொடங்கப்பட்ட கட்சி திமுக" எனப் பேசியிருப்பது அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 2026ல் எங்கள் ஆட்சிதான் எனக் கூறி வரும் நிலையில், ஸ்டாலினின் இந்தப் பேச்சு அவர்களைச் சீண்டுவதாக அமைந்திருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications