முக்கிய விக்கெட் காலி! மீண்டும் ஓபிஎஸ் அணியில் மைத்ரேயன் ஐக்கியம்! அவர் கூடவே.. எடப்பாடி அதிர்ச்சி
சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன், எடப்பாடி பழனிசாமி அணியில் ஐக்கியமான முன்னாள் எம்பி மைத்ரேயன் இப்போது பரபர முடிவை எடுத்து உள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகிறது. இப்போது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரு பிரிவுகளாகவே இயங்கி வருகின்றன.
ஓபிஎஸ் முதலில் கூட்டுத் தலைமை தேவை என்று சொன்ன நிலையில், அதைத் திட்டவட்டமாக மறுத்த எடப்பாடி கட்சிக்கு ஒற்றை தலைமையே தேவை என்பதில் உறுதியாக இருந்தார்.

அதிமுக
இதற்காகவே அவர் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வந்தார். கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் தான் நிலவுகிறது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி நீக்குவதும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பன்னீர்செல்வம் நீக்குவதாகவும் மாறி மாறி அறிவிப்பு வெளியாகியே வருகிறது.

எடப்பாடி, ஓபிஎஸ்
எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இருவருமே கட்சி தொண்டர்கள் தங்கள் பக்கம் தான் இருப்பதாகக் கூறி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் எடப்பாடிக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்தது. அதிமுக அலுவலக சாவி வழக்கிலும் எடப்பாடி பக்கமே தீர்ப்பு வந்தது. இருப்பினும், பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

ஓபிஎஸ் அணி
அது ஒரு புறம் இருக்க இரு தரப்பினரும் மாறி மாறி எதிர்த்தரப்பை விமர்சித்து வருவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தச் சூழலில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓபிஎஸ் தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் மாற்றுக் கட்சியிலிருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.

மைத்ரேயன்
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி மைத்ரேயன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். முதலில் ஓபிஎஸ் அணியில் தான் மைத்ரேயன் இருந்தார். இருப்பினும், சில மாதங்களுக்கு முன்பு திடீரென அவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவருக்கு ஆதரவு அளித்தார். இந்தச் சூழலில் அவர் மீண்டும் இப்போது ஓபிஎஸ் அணிக்குத் திரும்பி உள்ளார். எடப்பாடி பழனிசாமி அணியில் அவருக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை என்றும் இதன் காரணமாகவே அவர் மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா வாரிசு
அந்த நிகழ்ச்சியில் மைத்ரேயன் பேசுகையில், "ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ் தான். கடந்த 2017இல் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது அவருக்குப் பக்க பலமாகத் தான் இருந்தேன். யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல எனக்குப் புத்தி பேதலித்து போனது. இதனால் நானும் வேலியைத் தாண்டிய வெள்ளாடாக மாறினேன். எடப்பாடி பழனிசாமி அணிக்குச் சென்றேன்.

108 நாட்கள்
எடப்பாடி அணியில் இணைந்து 108 நாட்களில் இப்போது மீண்டும் ஓபிஎஸ் அணிக்குத் திரும்பி உள்ளேன்... சமீபத்தில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது எதிர்த் தரப்பில் இருக்கிறேன் என்று கூட யோசிக்காமல் அழைத்து நலம் விசாரித்தவர் தான் ஓபிஎஸ். அனைவரையும் ஒருங்கிணைத்து அதிமுக இயக்கத்தை வழிநடத்தும் திறன் ஓபிஎஸ் மட்டும் தான் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications