16 அடி உயரத்தில் அமையும்.. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை.. வரும் மே 28ம் தேதி திறப்பு!
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை சென்னை அண்ணா சாலையில் வரும் 28ம் தேதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
மேலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்குத் தனியாகச் சிலை அமைக்கப்படும் என்றும் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி சுமார் 1.50 கோடி செலவில் இந்த சிலை அமைக்கப்படுகிறது.
இப்போது சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை, பீடம் அமைக்கும் பணிகள் பொதுப்பணித்துறை மூலமாக நடைபெறுகிறது. கருணாநிதிக்கு இதுவரை அமைக்கப்பட்ட சிலைகளில் அதிக உயரமாக 16 அடியில் இந்த வெண்கலச் சிலையாக இது அமையவுள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைய உள்ள இந்த கருணாநிதியின் சிலை வரும் மே 28ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிலையைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் வெங்கையா நாயுடுவை சந்தித்திருந்தார். அப்போதே இந்த விழாவிற்கான அழைப்பை முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.