எளிய மக்களின் அன்பை பெறுவது சாதாரண விஷயமல்ல.. மாரிமுத்து மறைவுக்கு டாக்டர் விஜயபாஸ்கர் இரங்கல்
சென்னை: மக்களின் மனதில் இடம்பிடித்த திரைக்கலைஞர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் மறைவெய்திய செய்தி துயரத்தை தருகிறது என்று முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எளிய மக்களின் அன்பை பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல; அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு அசாத்தியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார் டாக்டர் விஜயபாஸ்கர்.
நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவரது உடலுக்கு எதிர் நீச்சல் நடிகர்கள், நடிகர் சங்கத் தலைவர் நாசர், சரத்குமார், இயக்குனர் வசந்த், வையாபுரி, லிவிங்ஸ்டன், ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், செண்ட்ராயன் மற்றும் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது சின்னத்திரை பிரபலங்களும் மாரிமுத்து மறைவிற்கு நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களும் மாரிமுத்து மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில், திரைப்பட உதவி இயக்குநர், இயக்குநர், நடிகர் என தன் திறமையால், நீண்டகால உழைப்பால் மக்களின் மனதில் இடம்பிடித்த திரைக்கலைஞர் மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் மறைவெய்திய செய்தி துயரத்தை தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

எளிய மக்களின் அன்பை பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல; அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பு அசாத்தியமானது. அந்த உழைப்பின் பயனை, மகிழ்ச்சியை அடைவதற்குள் மறைவெய்தியது ஆற்றொண்ணா துயரம். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார் விஜயபாஸ்கர்.
அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரைப்பட இயக்குனரும் பிரபல நடிகருமான திரு. மாரிமுத்து அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய திரு.மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

திரு.மாரிமுத்து அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் கூறியுள்ளார் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications