இனி அதிமுகவை வழிகாட்டுதல் குழு தான் நடத்தணும்..செங்கோட்டையன் கறார்.. இபிஎஸ், ஓபிஎஸ் ரியாக்ஷன் என்ன
சென்னை: இன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுகவின் வழிகாட்டுதல் குழு குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய கோரிக்கை ஒன்றை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்குக் கடந்த அக்டோபர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே கைப்பற்றின.
சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி
மாவட்ட கவுன்சிலராக தேர்தலில் மொத்தமுள்ள 138 இடங்களில் திமுக கூட்டணி 138 தன்வசப்படுத்தியது. அதேபோல ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் 1021 இடங்களில் திமுக வென்றது. அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதில் படுதோல்வி அடைந்தன.
அதிமுக தோல்வி
வெறும் ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், வலுவான தலைவர் இல்லாத காரணத்தினாலும் உள்கட்சி குழப்பங்களினாலும் தான் கட்சி இந்த அளவு மோசமான தோல்வியை அடைந்ததாக அக்கட்சியிலேயே பலரும் கருத்து தெரிவித்தனர்.
மாசெ கூட்டம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்துள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் அதிமுக தலைமையில் இன்று நடைபெற்றது.
என்ன ஆலோசனை
இந்தக் கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விட அதிமுக அக்கட்சியின் வழிகாட்டுதல் குறித்தே அதிகம் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த குழுவில் 11 உறுப்பினர்கள் உள்ள நிலையில், இதை 18 ஆக அதிகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த குழுவுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பரபரப்பைக் கிளப்பிய செங்கோட்டையன்
இதையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வழிகாட்டுதல் குழுதான் அதிமுகவை வழிநடத்த வேண்டும் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மூத்த தலைவர் என்பதால் செங்கோட்டையனையே வழிகாட்டுதல் குழுவின் தலைவராக நியமிக்கலாம் என சில கூறியுள்ளனர். மேலும் சிலர், செங்கோட்டையனை அதிமுக அவைத்தலைவராக நியமிக்கலாம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
உட்கட்சி தேர்தல்
இந்த குழுவின் உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தாகக் கூறப்படுகிறது. மேலும், எந்தவொரு முடிவையும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் எடுக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்றும் பல மாவட்டச் செயலாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விரைவில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெரியளவில் வெல்ல வேண்டும் என்றும் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாவட்டச் செயலாளர்கள் எடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்கவும் வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிமுக செயற்குழு கூட்டம்
இதற்கிடையே அதிமுக செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் டிசம்பர் 1ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் டிச. 1ஆம் தேதி காலை 10 மணிக்கு ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.