நரேந்திர மோடி மீது கூட புகார் இருக்கு! அதுக்காக அங்க சோதனை நடத்துவாங்களா? விஜயபாஸ்கர் தந்தை ஒரே போடு
சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து அவரது தந்தை சில பரபர கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
இன்று காலை முதலே தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசு விதிகளுக்குப் புறம்பாக ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாகப் பெறப்பட்ட புகாரில் வேலுமணிக்கு தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெய்டு
அதேபோல முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, சேலம், மதுரை, தேனி, புதுக்கோட்டை என முன்னாள் அமைச்சருக்குத் தொடர்புடைய 13 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இப்படி ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரு முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகார்
திருவள்ளூர் மாவட்டம் வேலன் நகரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இரு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் நிலையில், இந்த மருத்துவமனையில், புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்குத் தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாகச் சான்றிதழ் வழங்கியதாகப் புகார் எழுந்தது. அதாவது பணிகள் முழுமையாக முடியாததற்கு முன்னதாகவே பணிகள் முடிவடைந்து விட்டதாகக் கூறி மருத்துவமனை செயல்படச் சான்றிதழ் அளித்ததே இவர் மீதான குற்றச்சாட்டு.

சோதனை
இந்த புகாரின் அடிப்படையில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் காலை 6 மணி முதலே சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை தொடங்கிய போது, அங்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி இருந்தார்.

விஜயபாஸ்கர் தந்தை
இதனிடையே வீட்டின் முன்பு திரண்டு இருந்த விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களை விஜயபாஸ்கர் தந்தை சின்னதம்பி வெளியே வந்து பார்த்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புகார் வந்ததாகவும் அதன் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால், இதுவரை எந்தவொரு ஆவணத்தையும் அவர்கள் கைப்பற்றவில்லை.

ஸ்டாலின், மோடி மீதும் புகார்
இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அரசியல் ரீதியானவை.. பழிவாங்கவே இதுபோன்ற புகார் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஸ்டாலின் மற்றும் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. அதற்காக அங்கெல்லாம் சோதனை நடத்தி விடுவார்களா? குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்க ஆக வேண்டும். இதுவரை எங்கள் வீடுகளில் நடந்த சோதனைகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கவும் முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

பரபரப்பு
ஒரே நேரத்தில் இரு முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியுள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இரு அமைச்சர்கள் வீடுகளுக்கு முன்னாலும் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இரு அமைச்சர்களின் வீடுகளிலும் இதற்கு முன்னரும் ஏற்கனவே ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி
இதனிடையே இந்த ரெய்டிற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டிப்பதாகவும் கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications