Exclusive: தென்மாவட்டங்களில் பிரச்னையே ஓபிஎஸ்தான்.. அதிமுகவில் சாதி ரீதியான பிளவா? பொன்னையன் பரபர
சென்னை: ஒன் இந்தியா தமிழுக்குப் பிரத்தியேகமாகப் பேட்டி அளித்த அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டு உள்ளது
இந்தச் சூழலில், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் ஓபிஎஸ் குறித்தும் அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்தியேகமாகப் பேட்டியில் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

ஓபிஎஸ் தான் காரணம்
அந்தப் பேட்டியில் பொன்னையன், "அதிமுக தென் மாவட்டங்களில் பலவீனப்படவே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம்! கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்குவங்கி குறையவும் அதிக இடங்களில் இழக்கவும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சரிவே காரணம். இதுவே அவருக்குச் செல்வாக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது. எனவே அவரை நீக்கியதால் தான் அதிமுக தென் மாவட்டங்களில் பலவீனம் அடைந்தது என்று கூறுவதில் உண்மை இல்லை.

10.5 சதவிகித உள் ஒதுக்கீடு
10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை தங்களுக்கு ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. ஆனால் தென் மாவட்டங்களில் இருந்து இது போன்ற ஒரு குரலும் வரவில்லை. எனவே, தேர்தலுக்கு இது காரணம் எனச் சொல்வதில் உண்மை இல்லை. தோல்வி அடைந்துவிட்டதால் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காக இதை அவர்கள் கூறுகின்றனர்.

அரசியல் ரீதியாக
முறையான கணக்கெடுப்பு எடுத்து அதை அறிவித்தால் தான் சட்டரீதியாகச் செல்லும். ஆனால் அப்போது போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வந்ததால், அரசியல் ரீதியாக இந்த இட ஒதுக்கீடு அறிவித்தோம். எனவே, இது தற்காலிகமானது என்று அப்போது அமைச்சராக இருந்த உதயகுமார் சொன்னதும் கூட தவறில்லை. ஆனால், ஒன்று இதனால் தான் தென் மாவட்டங்களில் அதிமுக தோற்றது என்று நிச்சயம் கூற முடியாது.

பாமக
இந்த 10.5 இட ஒதுக்கீடு பாமகவுக்கே பலன் தரவில்லை அளிக்கவில்லை. பாமக வலுவாக இருந்த இடங்களில் கூட அவர்களால் வெல்ல முடியவில்லை. மொத்தம் 24 இடங்களில் போட்டியிட்ட பாமக, இரண்டு இடங்களில் மட்டுமே வென்றார்கள் அதுவும் வன்னியர்கள் பெரும்பான்மை இல்லாத பகுதி. எனவே இந்த இட ஒதுக்கீடு தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது எனச் சொல்ல முடியாது.

எடப்பாடி
அதேபோல தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி என்று கூறுவர் சொல்வது உண்மை இல்லை. அங்கும் பல நிகழ்ச்சிகளில் எடப்பாடி கலந்து கொள்கிறார். வைத்தியலிங்கமும் சரி ஓ. பன்னீர்செல்வமும் சரி சசிகலாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். இதனால் தான் ஓபிஎஸ் உடன் வைத்தியலிங்கம் இருக்கிறார். அவர் கொள்கை அடிப்படையில் ஓபிஎஸ் உடன் நிற்கிறார் என்று கூற முடியாது.

சாதி ரீதியாக
அதிமுக பிளவுபட்டு உள்ளதாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு பொன்னையன், "அதிமுக சாதி ரீதியாக பிளவுபட்டு உள்ளதாக வெளியாகும் தகவல்கள் பொய். அதிமுகவில் குறிப்பிட்ட சாதிக்கு தாங்கள் தான் தலைவர் என்று சொல்லும் அளவுக்கு எந்த ஒரு தலைவரோ நிர்வாகியோ இல்லை. நாங்கள் கட்சிகளில் அமைப்புகளை உருவாக்கும் போதே சாதி ரீதியாக அதை உருவாக்குவதில்லை.

பிரதிநிதித்துவம்
எங்கள் கட்சியில் பல ஊர்களில் ஒன்றிய, நகரச் செயலாளர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் தான். சாதி ரீதியாக நியமனங்களைச் செய்து இருந்தால் எந்த பகுதியில் எந்த சாதியினர் அதிகம் என்பதைப் பொறுத்து நிர்வாகிகளை நியமித்திருப்போம். ஆனால், அதிமுகவில் அப்படி நடக்காது. நியமனங்கள் எதுவுமே சாதி ரீதியாக நடக்காது. நாங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு உரியப் பிரதிநிதித்துவம் கொடுப்போம்.

விரைவில் அடுத்த நடவடிக்கை
இப்போதைய சூழலில் நாங்கள் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பின்னர், கட்சி ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். திமுகவை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். அடுத்த மக்களுக்கு அதிக இடங்களை வெல்ல வேண்டும். மீண்டும் அடுத்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு" என்றார்.












Click it and Unblock the Notifications