EXCLUSIVE: "நீ ஒரு தலித்.. அதெப்படி என் சேரில் உட்காரலாம்" இன்னும் தொலையாத தீண்டாமை.. குமுறும் சரிதா
என் சுயமரியாதையை விட்டு தர மாட்டேன் என்று ஊராட்சி தலைவர் சரிதா உறுதிபட தெரிவித்துள்ளார்
சென்னை: "நீ ஒரு தலித்.. அது எப்படி சேரில் உட்காருவே?"ன்னு என்னை கேட்டாலும் நான் உட்கார்ந்துட்டுத்தான் இருப்பேன்.. எழ மாட்டேன்.. என் சுயமரியாதையை நான் ஏன் விட்டுத்தரணும்? என்னை தெருவில் போனால்கூட வம்பிழுக்கிறாங்க.. தொகுதியில் என்னை வேலை செய்யவே விடுவது இல்லை" என்று பஞ்சாயத்து பெண் தலைவர் சரிதா தன் வேதனையை நம்மிடம் குமுறி சொல்கிறார்.
73வது வருட சுதந்திர தின கொடியை ஏற்றி வைத்த அன்று, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பிரச்சனை வெடித்தது.. ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்அமிர்தம்மாள், தலித் என்பதால், அவர் கொடியேற்ற கூடாதென ஊராட்சி மன்றத்தின் அதிகாரத்தில் இருந்தவர்களே எதிர்ப்பு சொன்னார்கள்.
பிறகு ஒருவழியாக கலெக்டர் அந்த விஷயத்தில் தலையிட்டு, அமிர்தம்மாளை தேசிய கொடியை ஏற்ற வைத்தார். அதுபோலவே நேற்றில் இருந்து ஒரு பிரச்சனை தமிழகத்தில் வெடித்து கிளம்பி உள்ளது.. கோவை மாவட்டம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா என்பவர், இந்த தீண்டாமை கொடுமையில்சிக்கி உள்ளார்.இது சம்பந்தமாக மாவட்ட எஸ்பியிடமும் புகார் ஒன்றையும் தந்திருந்தார்.
இது மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.. நேற்றில் இருந்தே சோஷியல் மீடியாவில் முக்கிய கவனத்தை பெற்று வருகிறார் சரிதா.. திமுக உட்பட, கம்யூனிஸ்ட், சமூக நீதிக்கட்சி, திராவிட தமிழர் கட்சி என எல்லா தரப்பில் இருந்தும் சரிதாவுக்கு நியாயம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், சரிதாவுக்கு என்ன பிரச்சனை, என்ன நடந்தது என்பதை அவரிடமே கேட்க முயன்றோம்.. ஒன் இந்தியா தமிழுக்காக அவர் அளித்த சிறப்பு பேட்டி இதுதான்:
என்ன நடந்தது மேடம்?
சுல்தான்பேட்டையில் பக்கம், ஜே கிருஷ்ணாபுரம் ஊராட்சி இருக்கு.. இந்த ஊராட்சி ஒன்றியம் பொது தொகுதியாக இருந்தது... இப்பதான் உள்ளாட்சி தேர்தலில் அதை தனி தொகுதியாக மாத்தினாங்க.. அதனால் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் நான் திமுக சார்பா போட்டியிட்டேன்.. நான் ஒரு தலித்.. தேர்தலில் அமோக வாக்குடன் ஜெயிச்சுட்டேன்... ஊராட்சி தலைவி ஆயிட்டேன்.. இது என் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவருக்கு பிடிக்கல... இவர் அதிமுகவை சேர்ந்தவர்.. முன்பு, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இவர் பதவி வகித்தவர்.. நான் ஜெயிச்சதும், எனக்கு பல தொந்தரவுகளை தர ஆரம்பிச்சிட்டார்.
பணி செய்ய விடாத அளவுக்கு, நீங்கள் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொண்டீர்கள்?
"ஆபீசுக்கு நான் போனதில் இருந்தே ஒவ்வொரு நாளும் பிரச்சனைதான்.. எனக்கான சேரில் நான் உட்கார போவேன்.. அப்போ பாலகிருஷ்ணன், "நீ ஒரு அருந்ததியர்... நீ எப்படி இந்த சேரில் உட்காரலாம்? எங்களுக்கு ஆர்டர் போடற அளவுக்கு வந்துட்டியா?"ன்னு கேட்பார்.. ஆனால் அவர் என்னை சேரில் உட்கார கூடாதுன்னு சொன்னாலும், நான் உட்கார்ந்துட்டுதான் இருப்பேன்.. எழ மாட்டேன்..எனக்கான உரிமை, சுயமரியாதையை நான் ஏன் விட்டு தரணும்? எலக்ஷன்ல ஜெயிச்சு இத்தனை மாசமாகியும், பெயர் பலகையில் கூட தலைவரான என் பேரை எழுத விடல. எனக்கு ஆதரவா ஆபீசில் யாராவது பேச வந்தால், அவர்களிடமும் தகராறு செய்துவிடுவார்.
ஆபீஸில் மட்டும்தான் இப்படி பிரச்சனைகளை சந்தித்தீர்களா?
இல்லை.. நான் தெருவுல நடந்து போனாலும் பாலசுப்பிரமணியம் ஏதாவது பேசி வம்பிழுப்பார்.. வாய்க்கு வந்ததை சொல்வார்.. நாங்க எல்லாருமே ஒரே ஊர்தான்.. முன்னாடியெல்லாம் அவர் என்கிட்ட சகஜமா பேசுவார்.. நல்லா பேசிட்டு இருந்தவர், தேர்தலில் நிக்க போறேன்னு சொன்னதில் இருந்தே பிரச்சனை ஆரம்பிச்சிட்டார்.. ஜெயிச்சதும் இது அதிகமாயிடுச்சு.. ஒருகட்டத்தில் கொலை மிரட்டலும் விடுத்தார்.. இதுக்கு பின்னாடி அதிமுகவின் தூண்டுதலும் இருக்கு... இவர் இதுவரைக்கும் எந்த நல்லதையும் ஊருக்கு செய்ததில்லை.. என்னையும் செய்ய விடாம தடுக்கிறார்.
போலீஸில் புகார் தந்திருக்கீங்களே.. என்ன சொல்றாங்க?
நான் புகார் தந்ததுமே வாங்கிக்கிட்டாங்க.. உடனே எப்ஐஆரும் போட்டாச்சு.. நடவடிக்கை எடுக்கிறதா நம்பிக்கை தந்திருக்காங்க.
தீண்டாமை இன்னமும் இப்படி பல ரூபங்களில் நடமாடுவதை, ஒரு பெண்ணாக எப்படி பார்க்கறீங்க?
சாதியே கூடாது என்று தான் படிச்சோம்.. உண்மையிலேயே அப்போ இருந்ததைவிட இப்போ தீண்டாமை குறைஞ்சே இருக்கு.. நிறைய பேர் மாறிட்டாங்க.. இந்த மாதிரி ஒருசிலர்தான் இப்படி நடந்துக்கிறாங்க.. இதுதான் வேதனையை தருது" என்று நம்மிடம் சொல்லி முடித்தார் சரிதா.
சரிதாவை சாதி ரீதியாக மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - முக ஸ்டாலின்
மரியாதைகள்
சம்பந்தப்பட்ட பாலசுப்ரமணியம் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. இருந்தாலும், ஒரு ஊராட்சி மன்ற தலைவருக்கு உண்டான எல்லா மரியாதைகளும் சரிதாவிற்கு கிடைக்க மாவட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும் என்பதும் நம்முடைய கோரிக்கைதான்.
சுயமரியாதை
இப்படித்தான் கடந்த டிசம்பர் மாதமும் ஒரு பிரச்சனை வெடித்தது.. "கேட்க நாதியற்ற நிலையில்தான் தாழ்த்தப்பட்டவர் நிலை உள்ளது.. நாங்க எல்லாரும் இஸ்லாத்துக்கு மாற போறோம்.. சுயமரியாதையை காப்பாற்றி கொள்ளவே நாங்க இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கோம்.." என்று கோவை மாவட்டத்தை சேர்ந்த 3000 தலித்துக்கள் இஸ்லாம் மதம் மாற போவதாக திடீரென அறிவித்ததும் அதிர்ச்சியைதான் தந்தது.
வேதனை
இந்நிலையில், சமூகத்தின் அடித்தட்டு மக்களை உயர்த்துவதற்காக கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டை கேலியாக்கும் வகையில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்து கொண்டிருப்பது வேதனையை தருகிறது. டீ கடைகளில் இரட்டை குவளைமுறை, சலூன் கடைகளில் முடிவெட்ட மறுப்பது, கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட அனுமதி மறுப்பு, என தீண்டாமையின் வடிவங்கள் நீள்கின்றன... இனியும், இன-பேத வேறுபாடு களையப்படவில்லையென்றால், சமூகக் கலப்பு என்பது பற்றிய புரிதலே இல்லாமல் போய்விடும்.
வர்ணாசிரமம்
அதுமட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோர்கள் ஊமைகளாக இருந்த காரணத்தால் அவர்களின் உரிமைக்காக விதை போட்டு கொடுத்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கனவுகளும் கனவுகளாகவே போய்விடும்... பொதுப்பார்வைகள் வெகுஜன மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.. அத்துடன், வர்ணாசிரம அரசியல் மாற்றப்பட வேண்டும் என்பதே நமது அனைவரின் ஆழ்மனசு எதிர்பார்ப்பாக உள்ளது!