அமைச்சர் சம்பத் உள்ளிட்ட 3 பேர் அரசியல் சூன்யகாரர்கள்- நாசமாக போவார்கள்.- அதிமுக எம்.எல்.ஏ.. சத்யா
சென்னை: அரசியல் சூன்யகாரர்களான கடலூர் அமைச்சர் சம்பத், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோரை நான் வணங்கும் ஈசனும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது. விசுவாசமான, உண்மையான, தொண்டர்கள் வயிறு எரிந்தால் இந்த படுபாதகர்கள் விரைவில் நாசமாக போவார்கள் என் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம்.
பண்ருட்டி சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார் சிட்டிங் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாமல் சொரத்தூர் ராஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா பன்னீர்செல்வம், குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசியல், பொது வாழ்வில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். சட்டசபை தேர்தலிலும் அவர் பணியாற்றவில்லை.
இதனையடுத்து சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ, அவரது கணவரான பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் பெருமாள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மார்ட்டின் லூயிஸ், நெல்லிக்குப்பம் நகரச் செயலாளர் சவுந்தர், வீரபெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தவைர் ராம்குமார் ஆகியோர் இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராகவும் சத்யா பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொகுதியிலேயே இல்லையே
அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் ஒரு தவறும் செய்யாத எங்களைப் போன்ற உண்மையான அதிமுக விசுவாசிகளை இழந்துகொண்டே போனால் கட்சியின் நிலை?. தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பிற்குப் பிறகு நாங்கள் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி அறிக்கை வெளியிட்டுவிட்டோம். அதன்பிறகு வேட்பாளர் அறிவிப்பில் இருந்து தேர்தல் முடியும் வரை பண்ருட்டி சட்டமன்ற தொகுதியிலேயே இல்லை.

வேதனை அடைந்தோம்
இறை சுற்றுலா மேற்கொண்டிருந்தோம். நாங்கள் ஊரிலே இல்லாத நிலையில் கட்சிக்கு எதிராகவோ, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவோ எப்படி தேர்தல் பணியாற்ற இயலும். இந்நிலையில், எங்கள் மீது அபாண்டமான, பொய்யான குற்றசாட்டை சுமத்தி நால்வரை நீக்குவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்து இருப்பது மிகுந்த மன வேதனை அளித்துள்ளது.

தவறான நடவடிக்கை
கடலூர் அமைச்சர் சம்பத் சொல்படி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை அறிக்கையைக் கேட்டுப் பெற்று இருந்தாலே உண்மை தெரியும். உண்மையான விசுவாசிகளின் மனதை புண்படுத்தியுள்ளார்கள். இதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

நாசமாக போவார்கள்
இந்த அறிவிப்பை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். உண்மையாகவே கட்சி விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரசியல் சூன்யகாரர்களான கடலூர் அமைச்சர் சம்பத், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோரை நான் வணங்கும் ஈசனும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது. விசுவாசமான, உண்மையான, தொண்டர்கள் வயிறு எரிந்தால் இந்த படுபாதகர்கள் விரைவில் நாசமாக போவார்கள் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications