மனித சங்கிலியை கைவிட்ட அர்ச்சகர்! 7 பேரில் 2 பேரை காப்பாற்றிய மக்கள்.. நங்கநல்லூரில் திக் திக்!
சென்னை: நங்கநல்லூர் மூவரசம்பட்டு குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த நிலையில் தண்ணீரில் மூழ்கிய இரு அர்ச்சகர்களை அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன..
சென்னை நங்கநல்லூர் அருகே மூவரசம்பட்டில் தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு பங்குனி மாதத்தையொட்டி 10 நாட்கள் உற்சவம் நடக்கும். அதன்படி இன்றைய தினம் தீர்த்தவாரி நிகழ்வு நடந்தது.
அப்போது தங்கள் கையில் இருந்த சுவாமியை நீராட்டும் விழாவிற்காக 25 அர்ச்சகர்கள் குளத்தினுள் இறங்கியுள்ளனர். அப்போது இரு முறை சுவாமியை நீராட்ட மூழ்கி எழுந்தனர். மூன்றாவது முறை மூழ்கி நீராட்டிய போது ஒரு அர்ச்சகரின் கால்கள் சேற்றில் சிக்கி தவறி விழுந்தார்.

அர்ச்சகர்கள்
அவரை அருகே இருந்த அர்ச்சகர்கள் காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களும் நீரில் மூழ்கினர். இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கும் போலீஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து நீரில் மூழ்கியிருந்த ராகவன், லோகேஸ்வரன், ராகவ், பானேஷ், சூர்யா ஆகியோரின் உடல்களை மீட்டனர்.

உடல்கள்
இவர்களின் உடல்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சென்னை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு விரைந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், பங்குனி மாதத்தில் இந்த கோயிலில் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

20 அடிக்கு மேல் ஆழம்
இந்த கோயில் குளத்தை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர்தான் தூர்வாரி அதை சுற்றி நடைபாதை அமைத்து மக்கள் வாக்கிங் செல்கிறார்கள். இந்த நிலையில் இந்த குளத்தின் ஆழம் 20 அடிக்கு மேல் இருப்பதால் மக்கள் யாரும் இறங்க வேண்டாம். நடைப்பயிற்சியை மட்டும் மேற்கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளோம்.

தீர்த்தவாரி
தீர்த்தவாரியை முன்னிட்டு அர்ச்சகர்கள் குளத்தில் இறங்கினர். அவர்கள் சங்கிலி போல் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டே நீரில் மூழ்கினர். அப்போது ஒருவர் இடறி விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற அவருக்கு அருகில் இருந்தவர்கள் முயன்றனர். அப்போது அவர்களும் நீரில் மூழ்கினர். இதை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் நீச்சல் தெரிந்தவர்களில் சிலர் தண்ணீரில் குதித்து இரு அர்ச்சகர்களை உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.

விபத்து
அந்த மக்களால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு முயன்று இரு உயிர்களை மீட்டுள்ளனர். இந்த விழாவில் விபத்து நேரிட்டதற்கு முக்கிய காரணமே இறந்த அர்ச்சகர்களில் நீச்சல் தெரியாமல் இருந்திருக்கும். மேலும் இந்த நிகழ்வுக்கு போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்காததும் விபத்து நடக்க காரணமாயிற்று. போலீஸாரிடம் முன் கூட்டியே பாதுகாப்பு கேட்டிருந்தால் அவர்கள் முன்பே குளத்தை வந்து பார்த்துவிட்டு தீயணைப்பு துறை, மருத்துவத் துறையினரை வரழைத்திருப்பர்.

பிழைக்க வைத்திருக்கலாம்
இதன் மூலம் நீரில் மூழ்கியவர்களை உடனடியாக காப்பாற்றப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து பிழைக்க வைத்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. இனி அடுத்த ஆண்டாவது இந்த விழாவை பாதுகாப்போடு நடத்த வேண்டும். தண்ணீருக்குள் இறங்கக் கூடாது என சொல்லியும் இவர்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இறங்கிவிட்டார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications