திராவிட மாடல் ஆட்சியின் சாதனையில் இன்னொரு ‘மைல்கல்’.. ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டிய வைகோ!
சென்னை : போலி பத்திரப் பதிவு ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்திருப்பது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை சரித்திரத்தில் அடுத்த மைல்கல் என திமுக அரசுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் மத்திய பதிவுச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் அண்மையில் ஒப்புதல் அளித்த நிலையில், போலி பத்திரப்பதிவு ரத்து செய்யும் நடைமுறையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்பா மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன்! மதிமுக நிர்வாகிகளை அதிர வைத்த துரை வைகோ!
மோசடி பத்திரப் பதிவு
தமிழகத்தில் மோசடி பத்திரப் பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதா கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி அண்மையில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, போலி பத்திரப்பதிவு ரத்து செய்யும் நடைமுறையை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
வைகோ பாராட்டு
இந்நிலையில், திமுக அரசின் இந்த முயற்சியைப் பாராட்டி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தில் சில ஆண்டுகளாக போலியாகவும், ஆள்மாறாட்டம் செய்தும், நிலம் மற்றும் சொத்துகளை மோசடியாக பத்திரப் பதிவு செய்து வருவது தொடர்ந்து கொண்டிருந்தது. தி.மு.கழக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட்டது.
பதிவுத்துறையே ரத்து செய்யும்
அதன்படி போலி ஆவணம், ஆள் மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பதிவுத் துறையே ரத்து செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இச்சட்ட முன்வரைவுக்கு கடந்த ஆகஸ்டு 6ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன், சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
நில அபகரிப்பு தடுக்கப்படும்
நில அபகரிப்பு செய்து, போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டது குறித்து மாவட்டப் பதிவாளர்களால் புகார் மனு பெறப்படும் பட்சத்தில், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து, பதிவு செய்யப்பட்ட பத்திரம் போலியானது என்று கண்டறிந்தால், அதை ரத்து செய்ய மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனை
போலிப் பத்திரப் பதிவால் பாதிக்கப்பட்டவர்களின் பதிவு ரத்து செய்யப்பட்டதற்கான ஆணைகளை நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிமையாளர்களிடம் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இச்சட்டத்தின் மூலம் போலி பத்திரப் பதிவை அறவே ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைச் சரித்திரத்தில் இது இன்னொரு மைல் கல்" எனத் தெரிவித்துள்ளார்.