யார்ரா நீங்களாம்.. விடாமுயற்சி பேனருக்கு பீர் அபிஷேகம்.. சென்னையில் எல்லை மீறிய ரசிகர்கள்!
சென்னை: அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியாகி இருக்கும் நிலையில், சென்னை ராக்கி திரையரங்கம் முன் வைக்கப்பட்டிருந்த அவரது பேனருக்கு ரசிகர் ஒருவர் பீர் அபிஷேகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் டாஸ்மாக் மதுபான கடையில் பிளாக்கில் வாங்கி பீர் அபிஷேகம் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமாருடன் நடிகை த்ரிஷா, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பின் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் வெளியாகி இருப்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, கும்பகோணம், நெல்லை என்று அனைத்து பகுதிகளிலும் திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அஜித் குமாருக்கு சில வாரங்களுக்கு முன்பாக தான் பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது. இன்னொரு பக்கம் கார் பந்தயத்தில் அஜித் குமார் கலக்கி வருகிறார்.
இதனால் அஜித் குமார் தொடர்புடைய அப்டேட்களுக்கு பஞ்சமில்லாமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே சென்னையில் விடாமுயற்சி படம் ரிலீஸான போது சில திரையரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் எல்லை மீறி சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி திரையரங்கில் விடாமுயற்சி படம் திரையிடப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் அஜித் குமாரை கொண்டாடும் விதமாக அவரது பேனர் வைத்து மாலையிட்டு மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் அந்த பேனருக்கு ரசிகர்கள் ஒரு பீர் ஊற்றி அபிஷேகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ராக்கி திரையரங்கம் எதிரில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடையில், பிளாக்கில் வாங்கி பீர் அபிஷேகம் செய்திருக்கிறார்.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பீர் அபிஷேகம் செய்து கொண்டாடி இருக்கின்றனர். மதுரையில் அஜித்தின் பேனரை ஊர்வலமாக கொண்டு வந்த போது, நடு ரோட்டில் பட்டாசு வெடிக்க ரசிகர்கள் முயற்சித்துள்ளனர். போக்குவரத்து அதிகமிருக்கும் சாலையில் பட்டாசு வெடித்தால், கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதுகுறித்த எந்த யோசனையும் இல்லாமல் ரசிகர்கள் பட்டாசு வெடிக்க முயற்சித்த போது, அங்கிருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.

சில நாட்களுக்கு முன்பாக அஜித் குமார் அளித்த நேர்காணலில், விஜய் வாழ்க.. அஜித் வாழ்க.. என்று சொல்லி கொண்டே இருக்கிறீர்கள்.. நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள் என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்தார். படத்தை படமாக மட்டுமே பார்த்துவிட்டு, குடும்ப நலனில் அக்கறை செலுத்துங்கள் என்று அஜித் குமார் கூறிய போதும், அவரது ரசிகர்கள் பட ரிலீஸின் போதே சேட்டையை கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications