அண்ணாவின் வாரிசு.. ஆட்சிப்பணியை அலங்கரிக்கும் கொள்ளுப்பேத்தி.. யுபிஎஸ்சி தேர்வில் மகுடம் சூடிய ராணி!
சென்னை: இந்திய ஆட்சி பணிகளுக்கான தேர்வான யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பாக 2019ம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இதில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
மொத்தம் 26 பணிகளுக்கான முடிவுகள் இதில் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் ஏழ்மையான பின்னணியை சேர்ந்த பலர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்று இருக்கிறார்கள்.

இந்தியா எப்படி
இந்தியா முழுக்க நடந்த இந்த ஆட்சி பணிகளுக்கான தேர்வில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் கொள்ளு பேத்தி வெற்றி பெற்றுள்ளார். 23 வயதான பிரித்திகா ராணி இந்த தேர்வில் வென்றுள்ளார். தமிழகத்தில் பலர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இவரின் வெற்றி தமிழகத்திற்கே நம்பிக்கை ஊட்டும் செய்தியாக, மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக வந்துள்ளது.

என்ன இடம்
அதிலும் பிரித்திகா ராணி தனது முதல் முயற்சியிலேயே தேர்வில் வென்று இருக்கிறார். 171 இடத்தை இவர் பிடித்துள்ளார். ஐஏஎஸ் ஆகும் கனவுடன் கடுமையான முயற்சிகளுடன் இவர் தேர்வை சந்தித்தார். இவரின் ரேங்க் காரணமாக பெரும்பாலும் இவருக்கு ஐஎப்எஸ் பணி கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

முதல் நபர்
இவர் யுபிஎஸ்சி வென்றவுடன் முதல் ஆளாக திமுக தலைவர் ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தின் அரசியலுக்கு அடித்தளம் இட்டவர் அண்ணா. அவரின் கொள்ளுப்பேத்தி ஆட்சி பணிக்கு வருவது தமிழகத்திற்கே பெருமையான விஷயம். ஆட்சி பணியை அலங்கரிக்க உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று ராணிக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசியல் இல்லை
அறிஞர் அண்ணா இன்றி தமிழகத்தின் அரசியலே இல்லை. இந்தி எதிர்ப்பில் தொடங்கிய தீ இன்னும் தமிழகத்தில் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கிறது. அதிமுக, திமுக என்று இரண்டு கட்சிகளும் அண்ணா இன்றி இல்லை. நான் கொண்டு வந்த சட்டங்களை நீக்க வேண்டும் என்றால்.. எந்த தலைவராக இருந்தாலும் எதிர்காலத்தில் பல முறை யோசிக்க வேண்டும் என்று கூறியவர் அண்ணா. அந்த அளவிற்கு மக்களை மனதில் வைத்து திட்டங்களை கொண்டு வந்தவர் அண்ணா.

ராணி ஆட்சி
தற்போது அதே அண்ணாவின் குடும்பத்தில் இருந்து ராணி ஆட்சி பணிக்கு வந்துள்ளார். அதிலும் இந்தி திணிப்பு, மாநில சுயாட்சி உரிமை பறிபோதல் என்று பல விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் மாநில சுயாட்சிக்கு வித்திட்ட அண்ணாவின் குடும்பத்தில் இருந்து ஒருவர் ஆட்சிக்கு பணிக்கு வருகிறார். கண்டிப்பாக இது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை அளிக்க கூடிய விஷயம் ஆகும்.












Click it and Unblock the Notifications