அத்தனையும் தங்கம் சார்.. சென்னை கல்யாண வீட்டில் ஆந்திர உறவுக்கார பெண் கொடுத்த மறக்க முடியாத பரிசு
சென்னை: சென்னை அடுத்த புழல்-அம்பத்தூர் நெடுஞ்சாலையில் அடுக்குமாடியில் குடியிருக்கும் சுகுமார் என்பவரது இல்லத்தில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த கையோடு ஆந்திராவிற்கு சென்ற உறவுக்கார பெண், போகும் போது சும்மா போகவில்லையாம்.. திருமண வீட்டில் 23 பவுன் நகைகள், ரூ.4 லட்சத்துடன் மாயமானதாக புகார் எழுந்துள்ளது.
திருமணம் நடைபெறுவதற்கு முன்பும், திருமணம் நடந்தபின்னரும் அந்த வீட்டில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். திருமணத்திற்கு முன்பு ஏதேனும் சிறிய அளவில் விபத்து அல்லது விபரீதம் நடந்துவிட்டால் அது தீராத வலி தரும் என்பதால்,மாப்பிள்ளை, பெண் இருவரையும் கண்ணும் கருத்துமாக இருக்க சொல்வார்கள்.

அதேபோல் திருமண வீட்டில் உள்ளவர்களும் நிச்சயம் முடிந்த கையோடு, திருமணம் வரை அசைவம் கூட சில வீடுகளில் சாப்பிட அனுமதிக்க மாட்டார்கள். அதேநேரம் திருமண வீடுகளில் எந்த சண்டையும் வராத அளவிற்கு உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியதும் வரும். அதேநேரம் திருமண வீடுகளில சில உறவினர்கள் கைவரிசை காட்டுவதும் நடக்கும். திருமண மண்டபங்களில், வீட்டில் யாருக்கும் தெரியாமல் சிலர் கைவரிசை காட்டுவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக சென்னையில் சந்தேகம் எழுந்துள்ளது. அதை பற்றி பார்ப்போம்.
சென்னை அடுத்த புழல் நகரில் அம்பத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள குடியிருப்பில் 55 வயதாகும் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி உமாமகேஸ்வரி (52). இவர்களுக்கு சீனிவாசன் என்ற மகன் இருக்கிறார். சீனிவாசனுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது.. திருமண வேலை தொடர்பாக ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையை சேர்ந்த உமா மகேஸ்வரியின் தங்கை மகள் அக்சயா என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்களாம்.
இதையடுத்து, திருமணம் முடிந்ததும் உறவுக்கார பெண் அக்சயா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது வீட்டிற்கு திரும்பி சென்று விட்டாராம். இந்த நிலையில், நேற்று வீட்டில் அனைத்து நகைகள் மற்றும் பணத்தையும் சுகுமார் குடும்பத்தினர் சரிபார்த்துள்ளனர். அப்போது, அதில் 23 பவுன் தங்க நகைகளும், ரொக்க பணம் ரூ,4 லட்சமும் திருட்டு போய் இருந்ததாம். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவுக்கார பெண் அக்சயா மீது எழுந்த சந்தேகத்தின் பேரில், அவர் மீது புழல் போலீசில் சுகுமார் புகார் கொடுத்தார்.
இது தொடர்பான புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் முபாரக் வழக்குப்பதிவு செய்து சூலூர்பேட்டைக்கு சென்று அக்சயாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர் நகை மற்றும் பணத்தை திருடி இருப்பது உறுதியாகும் பட்சத்தில் அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். திருமண வீட்டார் வீட்டில் நகை, பணம் மாயமான விவகாரத்தில் உறவுக்கார பெண்ணை போலீசார் தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications