சென்னை அண்ணாநகரில் கோரா ஃபுட் ஸ்ட்ரீட்ஸ் கடையில் தீவிபத்து.. 3 ஊழியர்கள் காயம்!
சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள கோரா ஃபுட் ஸ்ட்ரீட்ஸில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து 3 பணியாளர்கள் முகம் மற்றும் உடலில் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணாநகரில் கோரா ஸ்ட்ரீட்ஸ் எனப்படும் இரவு நேர உணவகம் உள்ளது. இது ஒரு காம்ப்ளக்ஸ் போல் இருக்கும். இங்கு நிறைய கடைகள் இருக்கும். தந்தூரி, ஐஸ்கிரீம், ஜூஸ்கள், சோடாக்கள், மொஜிட்டோக்கள், பிரியாணி, மொமோஸ், பரோட்டா, ஜூஸ், இறைச்சி ப்ரைகள், சைவம், அசைவ உணவு என அனைத்து விதமான உணவுகளுக்கும் தனித்தனியே கடைகள் உள்ளன.

இங்கு ஒரு ஏடிஎம் கார்டு போல் இருப்பதை ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி, எவ்வளவு பணத்திற்கு வேண்டுமோ அதை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். 200, 300, 500, 1000, 1500, என எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
அந்த கார்டுக்கு பதிவு கட்டணம் மட்டும் ஒரு முறை கட்டினால் போதும். அது 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். நாம் அந்த கார்ட்டை எந்த கடையில் வேண்டுமோ அங்கு ஸ்வைப் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். சாப்பிட்டது போக மீதம் இருந்தால் அதை அப்படியே வைத்துக் கொண்டு அடுத்த முறை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இல்லாவிட்டால் அங்கேயே வேறு ஹோட்டலில் கூட சாப்பிட்டுக் கொள்ளலாம். ஒரு வேளை பேலன்ஸ் தொகை குறைவாக இருந்தால் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அங்கேயே ரீசார்ஜ் கவுன்ட்டர்கள் இருக்கும். இரவு நேரங்களில் மட்டுமே இயங்கும் என்பதால் ஐடி ஊழியர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் உட்கார இடம் இல்லாத அளவுக்கு அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழியும். விடிய விடிய சுடச் சுட உணவு தயாராகும். கிட்டதட்ட தூங்கா நகரம் போல் இருக்கும். மற்ற ஹோட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தாலும் இந்த உணவகம் எந்த நேரத்தில் கைக் கொடுக்கும்.
இந்த நிலையில் இன்று காலை அந்த உணவகத்தில் ஒரு சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. இதில் சக்தி, ராகுல், ஞானபாலு ஆகியோர் தீவிபத்தில் காயம் அடைந்தனர். இவர்களுக்கு முகம், உடலில் சில பாகங்களில் தீக்காயம் ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தீவிபத்து காலையில் நடந்ததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. இதே இரவு நேரத்தில் நடந்திருந்தால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications