இன்று மமதா-அன்று ஜெ.; 2001-ல் கருணாநிதி கைதின் போது 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்காக டெல்லியுடன் மல்லுகட்டு!
சென்னை: மேற்கு வங்க தலைமை செயலாளராக இருந்த ஆலாபன் பந்தோபத்யாய் (அலாபன் பந்தோபாத்யாய) ஓய்வு பெற்ற நிலையில் அவருக்காக மத்திய அரசுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார் அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி. இதேபோல் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது நடவடிக்கையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்காக டெல்லியுடன் மல்லுக்கட்டினார் அன்றைய முதல்வரான மறைந்த ஜெயலலிதா.
மேற்கு வங்க தலைமை செயலாளராக இருந்தவர் ஆலாபன் பந்தோபத்யாய். இவரது பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆலாபன்.

என்ன பிரச்சனை?
கடந்த வாரம் யாஸ் புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்றார். அப்போது பிரதமர் மோடியை முதல்வர் மமதா காத்திருக்க செய்தார்; மோடியின் ஆய்வு கூட்டத்தில் மமதாவும் பங்கேற்கவில்ல- மாநில தலைமை செயலாளர் ஆலாபனும் பங்கேற்கவில்லை என சர்ச்சை வெடித்தது.

மமதா கடும் எதிர்ப்பு
இந்த சர்ச்சையை தொடர்ந்து ஆலாபன் பந்தோபத்யாய் அதிரடியாக டெல்லிக்கு மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். அவர் நேற்று மே 31-ந் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இதனை ஆலாபன் ஏற்கவில்லை. அத்துடன் மமதா பானர்ஜியும் ஆலாபனை டெல்லி பணிக்கு அனுப்ப மறுத்தும்விட்டார். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் மமதா பானர்ஜிக்கும் இடையே உச்சகட்ட மோதல் நடைபெற்று வருகிறது.

2001-ல் கருணாநிதி கைது
இதேபோலதான் 20 ஆன்டுகளுக்கு முன்னர் தமிழக முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதா, 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்காக மத்திய அரசுடன் நடத்திய போராட்டம் அப்போது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. 2001-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி நள்ளிரவில் கருணாநிதி வீட்டில் சோதனை நடத்தி அவரை கைது செய்தது ஜெயலலிதா அரசு. அப்போது கருணாநிதி மிக மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.

மத்திய பணிக்கு 3 அதிகாரிகள் மாற்றம்
இத்தனைக்கும் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசில் திமுக இடம்பெற்றிருந்தது. திமுகவின் முரசொலி மாறன், டி.ஆர். பாலு மத்திய அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் அவர்களையும் அப்போதைய ஜெயலலிதா அரசு பந்தாடியது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்த நிலையில் கருணாநிதி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட முத்துக்கருப்பன், ஜார்ஜ், நெல்சன் கிறிஸ்டோபர் ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் இப்போது மமதா பானர்ஜி காட்டுவதைப் போலவே அப்போது ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

அன்று ஜெ. - இன்று மமதா எதிர்ப்பு
இதனால் அப்போதைய பாஜக அரசுக்கும் தமிழகத்தில் இருந்த அதிமுக அரசுக்கும் இடையே கடுமையான மோதல் விஸ்வரூபம் எடுத்தது. மாநில அரசுகளின் ஒப்புதல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்தியஅரசு அழைத்துக் கொள்ள சட்டத்தில் இடம் உண்டு என அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் மறைந்த அருண் ஜேட்லி எச்சரித்தார். ஒருகட்டத்தில் மத்திய அரசு உத்தரவை மதிக்காத ஜெயலலிதா மீது நடவடிக்கை பாயும் என்றெல்லாம் மிரட்டப்பட்டது. சில மாதங்கள் பரபரப்பாக ஓடிய பிரச்சனை பின்னர் தணிந்தது. அன்று ஜெயலலிதா காட்டிய அதே கடும் எதிர்ப்பை இன்று மமதா பானர்ஜி காட்டி வருகிறார்.. இன்றும் மத்தியில் பாஜக ஆட்சிதான்!












Click it and Unblock the Notifications