குறைந்தது மழை.. சென்னை ஏர்போர்ட்டில் விமான சேவை மாலை முதல் மீண்டும் தொடங்கியது
சென்னை: மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, இன்று பிற்பகல் முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான சேவை, சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை 6 மணி முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
வளிமண்டல மேல் சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று கரையைக் கடந்ததால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
நேற்று இரவு முதல் மழைப்பெய்து வந்த நிலையில் சென்னை புறநகர் பகுதியில் பல்லாவரம், மீனம்பாக்கம், பழவந்தாங்கல், தில்லை கங்கா நகர், ஆதம்பாக்கம் ஆகிய ஐந்து சுரங்கப்பாதைகள் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சுரங்கப் பாதைகள்
இதன் காரணமாக வேளச்சேரி மடிப்பாக்கம் கோவிலம்பாக்கம் நங்கநல்லூர் ஆலந்தூர் சோழிங்கநல்லூர் பள்ளிக்கரணை மேடவாக்கம் கீழ்கட்டளை ஆகிய பகுதிக்கு செல்லக்கூடிய வாகனங்கள் சுற்றி விடப்பட்டுள்ளது

கன மழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இரவு மற்றும் இன்று காலை பலத்த மழை பெய்தது. சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட வட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை தொடர்பான சம்பவங்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் தெரிவித்துள்ளார்.

விமான சேவை
காற்று மற்றும் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று மதியம் 1.15 மணி முதல் மாலை 6 மணி வரை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மழை ஓய்ந்துள்ளதால் மாலை 6 மணிக்கு மேல் விமானங்கள், ஏர்போர்ட்டில் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது. விமான அட்டவணையுடன் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று விமான நிலையம் ட்வீட் செய்துள்ளது.

ஆந்திரா நிலவரம்
இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலம், தற்போது கனமழைக்கு தயாராகி வருகிறது, அடுத்த வாரம் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திராவை தாக்கக்கூடும். ஏற்கனவே மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிவாரண முகாம்களை திறந்து, தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். தமிழக எல்லையில் உள்ள நெல்லூர் மற்றும் சித்தூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு அவசரக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications