பாதிப்பு எல்லாருக்கும் ஒன்றுதான்.. ரேஷன் கார்டு இருந்தால் தான் பணமா? முதல்வருக்கு மக்களின் கோரிக்கை
சென்னை: பாதிப்பு எல்லாருக்கும் ஒன்றுதான், வெளியூர் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மிக்ஜாம் வெள்ள நிவாரணம் உண்டா இல்லையா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை..
நியாயமாக பார்த்தால் சென்னையில் அகதிகள் போல் வந்த மக்கள் தான் வெள்ளத்தில் மோசமாக பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்துள்ளனர். எனவே முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

சென்னையில் மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள 6000 நிவாரண தொகை என்பது சென்னையில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதேநேரம் அரிசி அட்டைதாரர்களுக்குத்தான் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பாதிப்பு இருப்பதை விசாரித்து அதன்பின்னர் அவர்கள் வங்கி கணக்கில் ரூ.6000 வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
உண்மையில் இந்த மழை வெள்ளதால் மோசமாக பாதிக்கப்பட்டது அகதிகளாக வந்து குடியேறியது வெளியூர் மக்கள் தான். அவர்கள் தான் சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் வசிக்கிறார்கள். சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் வாடகைக்கு குடியேறிய பலர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு இன்னமும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை. பலர் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கவே முடியாத நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டதன் காரணமாக பலர் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த காரணத்தால் பலர் இன்னமும் ரேஷன் கார்டு பெறவில்லை.
இதேபோல் மகளிர் உரிமை தொகை காரணமாக வெளியூரில் பலர் ரேஷன் கார்டு வைத்திருந்தும், முகவரிகளை மாற்ற முடியாமல் சென்னையில் வசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் காரணமாக சென்னைக்கு ரேஷன் கார்டுகளை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை. எங்கும் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். எனவே பலர் ரேஷன் கார்டை சென்னை முகவரிக்கு மாற்றவே இல்லை.. இந்த சூழலில் சென்னை ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் நிவாரணம் என்று அறிவித்திருப்பது நியாயம் இல்லை என்று மக்கள் வேதனை தெரிக்கிறார்கள்.
அதுமட்டும் இன்றி, பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், காரப்பாக்கம் ,கீழ்க்கட்டளை, பெரும்பாக்கம், எண்ணூர், சைதாப்பேட்டை, தாம்பரம் முடிச்சூர், மண்ணிவாக்கம், குன்றத்தூர், அனாகபுத்தூர், கொளத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, கொருக்குபேட்டை, மணலி உள்பட சென்னையின் புறநகர் பகுதிகளும், சென்னையின் ஆற்றை ஒட்டிய பகுதிகள் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இப்படியான சூழலில் இங்கு வசித்த வெளியூர் மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து, உடைமைகளை தொலைத்துவிட்டு, வாடகையும் கொடுக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
அதேபோல் பாதிப்பு என்பது எல்லாருக்குமே ஒன்று தான், பணக்காரர்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவருமே பெரிய பாதிப்பை சந்தித்துள்ளார்கள். எனவே பாகுபாடு பார்க்காமல் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் குடும்பத்துடன் வசிப்பவர்களுக்கு, ரேஷன் கார்டு இல்லாதவர்களாக இருந்தாலும் 6000 நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றும், இதுபற்றி தெளிவான அரசாணை வெளியிட வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications