அரசு மருத்துவமனையில் உயிரிழந்த வீராங்கனை பிரியா நினைவாக.. கால்பந்து தொடர்- பாஜக அண்ணாமலை தகவல்
சென்னை: மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியாவின் நினைவாக சென்னையில் பாஜக சார்பாக கால்பந்தாட்ட தொடர் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் நேற்று முன்தினம் உயிரிழந்தார். பிரியாவின் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததே காரணம் என்று தெரிய வந்த நிலையில், மருத்துவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் பிரியாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அதுமட்டுமல்லாமல் ரூ.10 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி மற்றும் வீடு ஆகியவை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் பிரியாவின் இழப்பிற்கு ஈடாகாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் பாவம்.. அண்ணாமலை அறிக்கை உப்பு சப்பில்லாதது.. ரவுண்டு கட்டி அடிக்கும் அமைச்சர் துரைமுருகன்!
அண்ணாமலை ஆறுதல்
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறுகையில், கால்பந்து வீராங்கனை பிரியாவின் இழப்பு என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. தமிழ்நாட்டில் இதற்கு முன் இப்படி பார்த்தது கிடையாது. குறிப்பாக மருத்துவ கட்டமைப்பு இந்தியாவிலேயே நன்றாக இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு தான்.
தமிழக அரசு
இந்த மருத்துவமனை முதல்வர் தொகுதியில் இருப்பது வேதனையாக இருக்கிறது. பல அரசு மருத்துவமனைகள் இதேபோன்ற நிலையில் உள்ளது. எத்தனையோ அரசு மருத்துவமனைகளில் நிர்வாக கோளாறுகளால் ஏற்படும் உயிரிழப்புகள் வெளிவருவதில்லை. அதையெல்லாம் மாநில அரசு இரும்புக்கரம் கொண்டு மருத்துவ கட்டமைப்பை மீட்டெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பாஜக கால்பந்து தொடர்
தொடர்ந்து, கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட பிரியாவின் நினைவாக பாஜக சார்பாக சென்னையில் கால்பந்தாட்ட போட்டியை நடத்தி காட்டுவோம். இதற்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரை அழைத்து வந்து, மிகப்பெரிய கவுரவத்தை கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு வழங்குவோம். அதேபோல் பிரியாவின் சகோதரர்கள் கால்பந்து விளையாடுகிறார்கள். அவர்கள் அடையாளம் காட்டும் 10 கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு பாஜக சார்பாக ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ராமன் விஜயன்
அதேபோல் அந்த 10 வீராங்கனைகளும் எந்த கால்பந்து அகாடமியில் இணைந்தாலும், அதற்கான முழு செலவையும் பாஜக ஏற்றுக்கொள்ளும். இதற்கு காரணம், ஒரு பிரியா இறந்துவிட்டார். அவருக்கு இணையாக 10 பிரியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட உள்ளோம். இன்னும் 5 நாட்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராமன் விஜயன் பாஜகவுடன் வருகிறார். அவர் வரும்போது கால்பந்தாட்ட தொடர் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார்.
உ.பி.யுடன் ஒப்பீடு
தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தை விட வளர்ந்த மாநில என்று சொல்லக் கூடிய அமைச்சர் மா.சுப்பிரமணியனால் வெட்கி தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம். முதலமைச்சரின் சொந்த தொகுதியில் நடைபெற்றுள்ளது. இதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.