முதலில் டெஸ்ட்.. அப்புறம் "போஸ்ட்.." மகேந்திரனுக்கு என்ன பதவி தரலாம்.. திமுக போடும் பிளான்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி வந்து திமுகவில் இணைந்துள்ளார் மகேந்திரன்.
லோக்சபா தேர்தலில் ம.நீ.ம வேட்பாளர்களிலேயே அதிக ஓட்டு வாங்கியவர், சட்டசபை தேர்தலிலும் சிங்காநல்லூர் தொகுதியில், அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக, 3வது இடம் பிடித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் திமுக தொடர்ந்து பெரிய அளவுக்கு வெற்றியை பதிவு செய்யாமல் வரும் நிலையில்தான் இப்படி ஒரு செல்வாக்கான நபரை தங்கள் பக்கம் இழுத்துள்ளது திமுக.

திமுக தலைமை
வந்தவருக்கு உரிய பதவியும், கவுரவம் கொடுக்க வேண்டுமே. அதுதான் திமுக தலைமையின் அடுத்த டாஸ்க்காக உள்ளது. தொடர்ந்து அதுபற்றிய விவாதங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அறிவாலய வட்டாரங்களில் இது குறித்து காது கொடுத்து கேட்டோம். அப்போது சில சுவாரசிய தகவல்கள் கிடைத்தன.

பவர் ஃபுல் பதவி
மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் அந்தஸ்தில் இருந்து, திமுகவில் இணைந்துள்ளார் மகேந்திரன். எனவே அவருக்கு ராஜ்யசபா எம்.பி. அல்லது கோவை மாநகர மேயர் வாய்ப்பு அல்லது பவர் ஃபுல்லான வாரிய தலைவர் என ஏதேனும் ஒரு பதவியை அவருக்கு தரப்படும் என ஏகப்பட்ட ஆப்ஷன்களை அள்ளி வைக்கிறது அறிவாலய வட்டாரம்.

அன்றே சொன்னோம்
மகேந்திரன் திமுகவுக்கு செல்வார் அவருக்கு பெரிய பதவி காத்திருக்கிறது என்பதை, மே மாதம் 20ம் தேதியே, முதலில் செய்தியாக வெளியிட்டது ஒன்இந்தியா தமிழ்தான்.

பல பதவிகள் பற்றி பரிசீலனை
தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சி கழகத்தின் (TIDCO) சேர்மன் பதவியை மகேந்திரனுக்கு வழங்கலாம் என்று திமுக திட்டமிட்டுள்ளதாம். இதற்கு மகேந்திரன் ஓகே சொல்லிவிட்டதாக மேற்கு மண்டல தகவல்கள் தெரிவித்ததை அப்போதே செய்தியாக வெளியிட்டோம். ஆனால் இப்போது மேலும் சில ஆப்ஷன்களும் சேர்ந்து கொண்டு இருக்கின்றன.

டெஸ்ட் வைங்க
நிச்சயம் ஏதேனும் ஒரு பதவி கிடைக்கும் என்பது எல்லோரின் எதிர்பார்ப்பு. ஆனால், கட்சியில் சேர்ந்த உடனேயே அவருக்கு முக்கிய பதவியா ? என்று கொங்கு மண்டலத்தில் குமுறல்கள் அதிகமுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடக்கட்டும். அதில் கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றியை திமுகவுக்கு பெற்று தருகிறாரா ? என ஒரு டெஸ்ட் வையுங்கள். அதன் பிறகு பதவியை பற்றி முடிவு செய்யுங்கள் என அறிவாலயத்தில் ஓரலாக குமுறி வருகிறார்கள்.

எந்த பதவி கிடைக்கும்
அந்த பதவியா ? இந்த பதவியா ? என ஹோஸ்யங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், கொங்கு மண்டல பொறுப்பாளராக மகேந்திரனை நியமித்து உள்ளாட்சி தேர்தல் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கலாமா ? என்று தலைமை ஆலோசிப்பதாக தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. மகேந்திரன் இணைவதற்கு சில நாட்கள் வரை, இந்த பதவியில் கனிமொழி நியமிக்கப்படலாம் என்று ஆலோசிக்கப்பட்டது என்கிறார்கள் திமுகவினர்.

உள்ளடி தயக்கம்
டெஸ்ட் வைத்து பாஸ் செய்வது நல்ல ஐடியாதான் என்று திமுகவிலுள்ள சீனியர்கள் சொல்கிறார்களாம். ஆனால், மகேந்திரனின் முக்கியத்துவத்தை குறைக்க மேற்கே பழம் தின்று கொட்டை போட்ட சில சீனியர்கள், உள்ளாட்சி தேர்தலில், உள்ளடி வேலை பார்த்தால் என்னாவது, எனவே இப்போதே பதவியை கொடுத்து களமிறக்கி விட வேண்டியதுதான் என்று தலைமைக்கு நெருக்கமானவர்கள் காதோரம் கிசுகிசுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications