அரை நிர்வாணமாக்கப்பட்ட திமுக தொண்டர்,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது 10 பிரிவுகளில் வழக்கு
சென்னை : சென்னையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது திமுக தொண்டரை அரை நிர்வாணமாக்கி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தண்டையார் பேட்டை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Recommended Video
தமிழ்நாட்டில் மொத்தம் 12,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே சிறுசிறு பூசல்கள் நடந்தது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இச்சூழலில் கடந்த சனிக்கிழமை சென்னை ராயபுரத்தில் 49ஆவது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் கள்ள ஓட்டுப் போட்டுவிட்டுத் தப்ப முயன்றதாகக் கூறி ஒருவரைப் பிடித்து அதிமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தாக்கியதாகப் புகார்
அப்போது முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் இதைத் தடுக்காமல் அதிமுகவினருடன் இணைந்து அவரை தாக்கியதாக திமுக தரப்பு குற்றஞ்சாட்டியது. மேலும் கள்ள ஓட்டு புகாரில் சிக்கிய அந்த திமுக பிரமுகரின் சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக்கி இழுத்து சென்றனர் அதிமுகவினர். இந்தச் சூழலில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முதல்வர் கடிதம்
இந்த நிலையில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், " முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் அவர்கள் சட்டத்தைத் தன் கையிலே எடுத்துக்கொண்டு, தி.மு.கழக நிர்வாகியின் சட்டையைக் கழற்றி அவமானப்படுத்தியிருக்கிறார். கழகம் இதனைச் சட்டரீதியாக நிச்சயம் எதிர்கொள்ளும். அப்போது அவர்களின் சட்டை மட்டுமல்ல, மொத்தமும் கழன்று போகிற வகையில் அம்பலப்படுவார்கள் என்பது நிச்சயம்." என தெரிவித்திருந்தார்.

ஜெயக்குமார் கைது
இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் அளித்த புகாரின் பேரில் அமைச்சர் ஜெயக்குமாரை தண்டையார்பேட்டை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல், கொலை மிரட்டல்,ஆபாசமாகத் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று இரவு 8 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தண்டையார்பேட்சைன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் புகாரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் பறப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications