Kaliyammal: நாளை அதிமுகவில் இணைகிறார் காளியம்மாள்? நாதகவிலிருந்து விலகிய ஓராண்டில் நடந்தது என்ன?
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், எந்த கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது அவர் அதிமுகவில் நாளை இணைகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய இந்த ஓராண்டு காலகட்டத்தில் தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் காளியம்மாள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இறுதியாக அதிமுகவில் நாளை இணைகிறார் என்கிறார்ரகள். ஏற்கனவே தவெகவில் இணைய போவதாக வந்த தகவலை காளியம்மாள் மறுத்திருந்த நிலையில் இந்த தகவலுக்கு அவர் எந்தமாதிரி ரியாக்ட் செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் பெண் முகமாக பரீட்சயமானவர் காளியம்மாள். இவர் அந்த கட்சியில் இருந்த போது தமிழ் தேசியம், தமிழ் மண் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விவாதித்திருந்தார்.
மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் கட்சியில் தனது மனைவி கயல்விழிக்கு, சீமான் பொதுச் செயலாளர் பதவியை கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த காளியம்மாள் அந்த பதவியை தனக்கு தர வேண்டும் என கேட்டதாக சீமானே ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அதிருப்தியால் காளியம்மாள், கட்சி செயல்பாடுகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார். சீமானும் அவருடைய தம்பிகளும் காளியம்மாளை கடுமையாக விமர்சித்திருந்தனர். இதையடுத்து கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார்.
அக்கட்சியில் இருந்து விலகிய அவர் ஏதாவது ஒரு இயக்கத்தை தொடங்குவார், அல்லது ஒரு கட்சியில் இணைவார் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தது பேசுபொருளானது.
இதனால் அவர் பாஜகவில் இணைகிறார் என தகவல்கள் கிடைத்தன. ஆனால் அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு தவெகவில் ஆதவ் அர்ஜுனாவும் நிர்மல் குமாரும் இணைந்த போது காளியம்மாளும் பனையூர் அலுவலகத்திற்கு செல்கிறார் என சொல்லப்பட்டது.
ஆனால் காளியம்மாள் இந்த செய்திகளை மறுத்தார். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக எந்த கட்சியில் இணையலாம் என தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகளிடம் காளியம்மாள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதில் அதிமுகவுக்கு செல்வது என முடிவெடுத்து நாளை இணைகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாகை மாவட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள். காளியம்மாளின் குடும்பம் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுனாமியின் போது உயிரிழந்தவர்களை தேடி அலைந்ததையும் , உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு கூட நடத்த முடியாத சோகத்தையும் காளியம்மாள் பகிர்ந்து கொண்டார். கட்டுமரம் ஓட்டி காளியம்மாளின் அப்பா குடும்பத்தை நடத்தினார் என அவரே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இணைந்து 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அது போல் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வடசென்னையிலும் 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியிலும் போட்டியிட்டார். அப்போது மைக் சின்னத்தில் போட்டியிட்ட அவர் 1.25 லட்சம் வாக்குகளை பெற்ற நாதக வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications