“இதுக்கு பதில் சொல்லுங்க”.. முதல்வர் ஸ்டாலினுக்கு சப்போர்ட்டாக வரிந்து கட்டி வந்த ப.சிதம்பரம்!
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வியை மேற்கோள் காட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்.
கடந்த 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு என எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைளும் ஏற்கப்படவில்லை.

தமிழ்நாடு புறக்கணிப்பு: இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து அறிக்கை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
"சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கான மத்திய அரசின் நிதியை இந்த பட்ஜெட்டில் நாம் மிகவும் எதிர்பார்த்திருந்தோம். 2020 கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசரமாக வந்து அடிக்கல் நாட்டிய திட்டம்தான் அது. ரூ.63 ஆயிரம் கோடி திட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என கடந்த 2021ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
ஸ்டாலின் எழுப்பிய கேள்வி: ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த திட்டதில் ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தமிழ்நாடு அரசுதான் இந்த திட்டத்தை முடுக்கிவிட்டு செயல்படுத்தி வருகிறது. இது குறித்து கேட்டால், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் என்பது மாநில அரசினுடையது என்று நாடாளுமன்றத்தில் பதிலளிக்கிறார்கள். அப்படியெனில் ரயில்வே துறையை மாநில அரசுக்கு கொடுத்துவிடுவார்களா?
இந்த பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதல் குறித்து மத்திய அரசு மூச்சு கூட விடவில்லை. ஆனால் பல மாநிலங்களில் இதை விட சிறிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கி நிதி வாரி வழங்கப்பட்டிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்?" என்று கேள்வி எழுப்பினார் முதல்வர் ஸ்டாலின்.
ப.சிதம்பரம் ட்வீட்: இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், “1-2-2021 அன்று மத்திய அரசின் 2021-22 ஆண்டுக்கான வரவு- செலவு அறிக்கையை இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அப்பொழுது அவர் ஆற்றிய உரையின் பத்தி 59ல் குறிப்பிட்டது:
"ரூபாய் 63,246 கோடி செலவில் நிறைவேற்றப்படும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பு நிதி (counterpart funding) வழங்கப்படும்"
பதில் சொல்வாரா நிதி அமைச்சர்?: நேற்று பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் இதுவரை மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூடத் தரவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். முதலமைச்சரின் கூற்றுக்கு மத்திய அரசு - குறிப்பாக இந்திய நிதி அமைச்சர் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார் என்று கருதுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications