இடைத்தேர்தலைவிட பொதுத்தேர்தல் நடத்தலாம்... ப.சிதம்பரம் அட்வைஸ்!
சென்னை: தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதைவிட முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இந்த 18 தொகுதிகளுக்கும் எம்எல்ஏக்கள் இறந்ததால் காலியாக இருக்கும் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. காலியாக உள்ள 20 தொகுதிக்கு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் " இன்றைய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது. 18+2 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட, முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது. 18+2 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட, முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும்
— P. Chidambaram (@PChidambaram_IN) October 25, 2018
பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும், தமிழகத்தில் 2020ல் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும். தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் ஓராண்டில் மீண்டும் முழு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும், இதனால் வீணான நிதி விரயமே ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு ப. சிதம்பரம் இவ்வாறு கூறி இருக்கலாம்.