"4 நாளா சாப்பிடல”.. திமுக அதிமுக கூட்டணி பேச்சு குறித்து சசிகலா வேதனை
சென்னை: "திமுக - அதிமுக கூட்டணி என்ற தகவலை கேட்டு 4 நட்களாக சாப்பிடவில்லை" என சசிகலா வேதனையுடன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார்.
சென்னை போயஸ் கார்டனில் சசிகலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், "அதிமுகவிற்கு இப்போதைய தேவை ஒற்றுமை மட்டுமே. நாம் ஒன்றாக இருந்து இருந்தால் இன்றைக்கு அதிமுக ஆட்சி அமைந்து இருக்கும். அதிமுக ஒன்றிணையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுகவை அழிக்க நினைத்த கட்சி திமுக.

திமுக எதிர்ப்பு மனப்பான்மையை ஒருபோதும் விட மாட்டோம். திமுக அதிமுக கூட்டணி என்ற தகவலை கேட்டு 4 நட்களாக சாப்பிடவில்லை. அதிமுக பிளவு திமுகவிற்கு சாதகமாக இருக்கும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக ஒன்றிணைவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
எல்லொரும் ஒற்றுமையாக இருந்தால் அதிமுக கடலாக மாறிவிடும். மீண்டும் வருவோம். ஒன்றும் கெட்டுப்போகவில்லை. நான் விளையாட்டாகப் பேசமாட்டேன். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் காலத்தின் கட்டாயம் " எனத் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்துள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக மொத்தமாக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுக பாஜக கூட்டனியில் முதுகுளத்தூர், உசிலம்பட்டி, சாத்தூர் மற்றும் தென்காசி ஆகிய 4 தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற முடியாதபடி சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி வாக்குகளைப் பிரித்தது.
இதற்கிடையே அதிமுக எஸ்பி வேலுமணி (25) அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி (22) அணி என இரண்டு அணிகளாகப் பிளவுபட்டுள்ளது. மொத்தம் உள்ள 47 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தற்போது இரு அணிகளாகப் பிரிந்துள்ளனர். எஸ்பி வேலுமணி அணியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏக்கள் விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர்.
இன்று சட்டசபையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, குதிரை பேரம் நடந்துள்ளது எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற, அவர்களுக்கு அமைச்சர் பதவி தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறப்பட்டுள்ளது எனக் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதே சசிகலாதான். சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும். இப்போதும் கட்சியில் உள்ளவர்களை குறை சொல்லி வெளியே அனுப்பக் கூடாது. திமுகவை எதிர்த்துதான் இக்கட்சி தொடங்கியது. அதிமுகவை பலப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications