தீபாவளி நேரத்தில் கோரச் சம்பவம்.. ஆவடி அருகே வீட்டில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலி!
சென்னை: ஆவடி அடுத்த தண்டுரையில் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் வீடு முழுவதும் சேதமான நிலையில், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த தண்டுரையில் வீட்டுக்குள் வைத்து நாட்டு வெடிகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருநின்றவூரைச் சார்ந்த யாசின் என்பவர் தன்னுடைய நண்பருடன் பட்டாசு வாங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். அப்போது விற்பனை நடந்து கொண்டிருந்த வீட்டிற்குள் திடீரென உள்ளே இருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியுள்ளது. இதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வெடி விபத்து நடந்த வீட்டுக்குள் வேறு யாரேனும் இருக்கிறார்களா எனத் தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீட்புப் படையினர் தீயை அணைத்து இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டுக்குள் இருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதால் அந்த பகுதியில் பயங்கர சத்தம் ஏற்பட்டது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications