Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நம் பெண்கள் ஒரு சேலை வாங்கினால் கூட அவங்களுக்குப் பிடிச்ச கடையில, அவங்களுக்குப் பிடிச்ச டிசைன்ல, அவங்களுக்குப் பிடிச்ச கலர்ல வாங்கணும்னு நினைப்பாங்க. அதை மனசுல வச்சுதான் இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்.'இல்லத்தரசி' திட்டத்தில் என்ன வாங்கணும், எப்படி வாங்கணும் எல்லாமே உங்க சாய்ஸ்தான்." என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன.

Freedom to Choose Stalin Backs 8000 Coupen Illatharasi Scheme for Women

8,000 ரூபாய் கூப்பன் வாக்குறுதி

ஆளுங்கட்சியான திமுக மகளிர் வாக்குகளை கைப்பற்றும் நோக்கில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதில் பெண்களின் கவனத்தை ஈர்த்தது ஸ்டாலின் அறிவித்த இல்லத்தரசி ரூ 8000 கூப்பன் திட்டம். வீட்டு உபயோக பொருட்கள் வாங்க இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்.

இந்த கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் ஓவன், மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களை புதிதாக வாங்கி கொள்ளலாம். அல்லது ஏற்கெனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களை எக்சேஞ்ச் செய்யும்போதும் இந்த கூப்பனை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் பேச்சு

இந்நிலையில், இந்த கூப்பன் வாக்குறுதி பற்றி இன்று பிரச்சாரத்தில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். திருச்சியில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை என்பதை டபுள் மடங்காக்கி இனி 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப் போறோம். அதேபோல் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில கல்லூரிக்குப் போகிற மாணவர்களுக்கு இப்போது மாதம் மாதம் 1,000 ரூபாய் வழங்கி வருகிறோம். இனி அது 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல், காலை உணவுத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்த நாம் அறிவித்திருக்கிறோம். மேலும், 15 லட்சம் மாணவர்கள் அதனால் பயன்பெறப் போகிறார்கள். இன்னும் அதிகமான தாய்மார்கள் காலையில சீக்கிரம் எழுந்து சமையல் செய்யும் சுமை குறையப்போகுது.

கூப்பன் ஏன்?

அதேபோல், இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இன்னொரு சூப்பர் டூப்பர் வாக்குறுதியும் கொடுத்திருக்கிறோம். இல்லத்தரசிகள் தங்களுடைய வீட்டுக்கு தேவையான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டிவி, கிரைண்டர், மிக்ஸி, மைக்ரோவேவ் அவன், இண்டக்ஷன் அடுப்பு போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் புதிதாக வாங்கவும் அல்லது ஏற்கனவே பயன்படுத்தி வர இத்தகைய பொருட்களைக் கொடுத்துவிட்டு அதுக்குப் பதிலா வேற வாங்கிக்கவும் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

அதுவும் நீங்கள் வசிக்கிற பகுதிகளில் உள்ள உங்களுக்கு பிடித்த கடையில் உங்களுக்கு பிடித்த கம்பெனி உங்களுக்கு பிடித்த மாடலாக பார்த்து இந்தப் பொருட்களை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் கொடுப்போம் என அறிவித்திருக்கிறோம்.

எல்லாமே உங்கள் சாய்ஸ்

இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க இதைப் பற்றித்தான் ஒரே பேச்சாக இருக்கிறது. நம் பெண்கள் ஒரு சேலை வாங்கினால் கூட அவங்களுக்குப் பிடிச்ச கடையில, அவங்களுக்குப் பிடிச்ச டிசைன்ல, அவங்களுக்குப் பிடிச்ச கலர்ல வாங்கணும்னு நினைப்பாங்க. அதை மனசுல வச்சுதான் இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்.'இல்லத்தரசி' திட்டத்தில் என்ன வாங்கணும், எப்படி வாங்கணும் எல்லாமே உங்க சாய்ஸ்தான்.

வயிறெரிகிறார் பழனிசாமி

அதேபோல உலகுக்கே உணவளிக்கக்கூடிய உழவர்களை மதிக்கக்கூடிய அவர்களை மகிழ்விக்க ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இலவச மின்சாரம் பெறக்கூடிய 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எந்தவித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும்.

எல்லாரும் பழைய பம்பு செட் வச்சிருக்கிறவங்க ஒருவேளை வச்சிருப்பீங்க. சிலது அடிக்கடி ரிப்பேர் ஆகும். அதிக கரண்ட் செலவாகும். அதிக விலை கொடுத்து வாங்க முடியாத நிலையில இருப்பீங்க. அதை நம்ம திராவிட மாடல் ஆட்சியில அரசே இனி வாங்கித் தரும்.

மக்களுக்கு நேரடியாக 8,000 ரூபாய்க்கான கூப்பனை தரப்போறோம். நம்முடைய இல்லத்தரசிகள் திட்டத்தை பார்த்து இன்னைக்கு வயிறெரிஞ்சு, அது ஊழலுக்கான திட்டம்ன்னு சொல்றாரு. யாரு? பழனிசாமி சொல்றாரு. எந்த பழனிசாமி? சம்மந்திக்கு கான்ட்ராக்ட் கொடுக்குறதுக்காகவே ஆட்சியை நடத்துன பழனிசாமி. திமுக செய்கிற ஒவ்வொரு திட்டமும் தரமானதாக இருக்கும்.

குவாலிட்டி

எடுத்துக்காட்டுக்கு சொல்றேன், தலைவர் கலைஞர் 2006 தேர்தலின் போது கலர் டிவி வழங்குவேன்னு சொன்னாரு. ஆட்சி பொறுப்புக்கு வந்த உடனே கலர் டிவியோட கொள்முதல் நேர்மையாகவும், தரமானதாகவும், யாரும் குறை சொல்ல முடியாத வகையில இருக்கணும்ன்னு முடிவு செஞ்சு, அதுக்கான டெண்டரை, ஒப்பந்தத்தை, ஒப்பந்ததாரரை முடிவு செய்ய அனைத்து கட்சிகள் கொண்ட, அதிமுகவும் சேர்த்து, எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுகவும் சேர்த்து, அனைத்து கட்சி உறுப்பினர்களை சேர்த்து ஒரு குழுவை அமைத்தார்.

2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே கலர் டிவி வழங்குகிற அந்த விழாவை தொடங்கி, ஒன்றரை கோடிக்கு அதிகமான நம்முடைய தமிழர்களோட வீடுகளுக்கு கலர் டிவியை வழங்கினோம். கிட்டத்தட்ட 20 வருஷம் ஆச்சு, இன்னைக்கும் பல வீடுகள்ல கலர் டிவியா மட்டுமல்ல, கலைஞர் டிவியா அது நிலைச்சு நிக்குது. இதுக்கு பேர்தான் குவாலிட்டி.

இதுவே அதிமுக ஆட்சியில மிக்ஸி கொடுத்தாங்க, கிரைண்டர், மின்விசிறின்னு கொடுத்தீங்களே என்னாச்சு? இந்த லட்சணத்துல வாய் இருக்குன்னு என்ன வேணாலும் பேசலாம்ன்னு பேசிட்டு இருக்கார் நம்முடைய பழனிசாமி. ஏற்கனவே 2021 தேர்தல்ல மகளிர் உரிமைத் தொகையா நாங்க 1,000 ரூபாய் வழங்குவோம்ன்னு சொன்ன உடனே, அவசர அவசரமா வீட்ல இருக்கிற ஜெராக்ஸ் மெஷினை ஆன் பண்ணிட்டு 1,500 ரூபாய் தருவோம்ன்னு அறிக்கை வெளியிட்டார்.

எடப்பாடி பழனிசாமி வாய் சவடாலும், அவரோட அலங்கோல ஆட்சி நிர்வாகத்தோட ஊழலும், அந்தப் பவுஸும் தெரிஞ்சு மக்களாலான நீங்க அவரைப் புறக்கணிச்சீங்க. இப்பவும் மக்களுக்கு நல்லது நடக்கக்கூடாதுன்னு வயித்தெரிச்சலில் தன்னைப் போலவே பிறரையும் நினைச்சு ஊழல் நடக்குதுன்னு பேசிட்டு இருக்கிறார்." எனப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+