காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறுவதில் தாமதம்- டிச. 2-ல் தமிழகம், கேரளாவுக்கு அதிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்தமானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் டிசம்பர் 2-ந் தேதி தமிழகம், கேரளாவில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான அதிதீவிர நிவர் புயலானது சென்னை உட்பட பல இடங்களுக்கு நல்ல மழையை தந்துள்ளது. வடதமிழகத்தில் செய்யாறு, பாலாறு உள்ளிட்ட பல ஆறுகளில் பல ஆண்டுக்ளுக்குப் பின்னர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வங்க கடலில் மீண்டும் காற்றழுத்தம்
வடதமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பின. இந்த நிலையில் வங்க கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 2-ந் தேதி முதல் தமிழகத்தை நோக்கி வரக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒரு புயல்
இந்த புதிய காற்றழுத்த தாழ்வானது புயலாக உருவானால் அதற்கு புரேவி அல்லது புரெவில் அல்லது புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைவாய்ப்பு எச்சரிக்கை
மேலும் நாளை தென் தமிழகம், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. டிசம்பர் 1-ந் தேதியன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும் ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாவதில் தாமதம்
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு 36 மணிநேரமாகும். தற்போதைய நிலையில் டிசம்பர் 2-ந் தேதியன்று தமிழகம், கேரளாவில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications