ரேஷன் கார்டு வைத்திருக்கும் எல்லா மகளிருக்கும் ரூ 1000 உரிமைத் தொகை? வதந்தி என அமைச்சர் விளக்கம்
அருப்புக்கோட்டை: 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ 1000 வழங்கப்படும் என தமிழக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்தாக வெளியான செய்திகள் வதந்தி ஆகும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதே அரசின் இலக்காகும் என்று விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக தமிழ்நாடு ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் 'மகளிர் உரிமைத்தொகை' என பேசியதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது வரை 1.62 கோடி பெண்களுக்கு ரூ 1000 உரிமைத் தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜனவரி மாதம் முதல் ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தாக பொய்யான செய்திகள் நேற்று பரவின.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தொடங்கி வைத்தார். அதன்படி கஞ்சநாயக்கன்பட்டியில் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 17 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தையும், சுக்கில நத்தம் கிராமத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள நியாய விலை கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மீனாட்சிபுரம் மற்றும் ஆமணக்கு நத்தம் கிராமத்தில் தலா ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கும், ரூ.21 லட்சம் மதிப்பில் புதிதாக பைப்லைன் அமைக்கும் பணிகளுக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் குருந்தமடத்தில் ரூ 20 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் ரூ 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் கலைஞர் உரிமைத் தொகை சிலருக்கு விடுப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் மகளிர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்.
எனக்கு ஆயுள் உள்ளவரை இந்த தொகுதிக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். கடவுள் என்னை எத்தனை நாட்கள் ஓடவிடுகிறாரோ அத்தனை நாட்களுக்கு நான் உங்களுக்காக ஓடிக் கொண்டே இருப்பேன். இவ்வாறு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பேசியது ரேஷன் கார்டு வைத்துள்ள எல்லோருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறியதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத் தொகை திட்டமானது கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கியது. சில நிபந்தனைகளுடன் தகுதியுள்ள 1.15 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் வங்கிக் கணக்கில் ரூ 1000 செலுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து விடுபட்ட பெண்களுக்கு அடுத்தடுத்து மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வரை 1.62 கோடி பேருக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications