மாலையில் திருச்சி.. இரவே சென்னை ரிட்டர்ன்.. 12.10 மணிக்கு முதல்வர் நடத்திய சோதனை.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் நேற்று கனமழை பெய்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வார் ரூமிலும் நேரடியாக களத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று மதியம் 2 மணியில் இருந்து இரவு 12 மணி வரை விடாமல் பெய்த கனமழையால் மொத்த சென்னை சிட்டியும் ஸ்தம்பித்து போனது. பல இடங்களில் சென்னையில் நேற்று 200 மிமீக்கும் அதிகமாக மழை பதிவானது.
கணிப்புகளை மிஞ்சி, எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.

ஸ்டாலின்
நேற்று முதல்வர் ஸ்டாலின் மழை செய்திகள் வெளியாக தொடங்கியதும் தயாரிப்பு பணிகளை செய்யும்படி மாநகராட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார். தண்ணீர் வெளியேறாதபடி உடனுக்குடன் செயல்பட வேண்டும். தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் உடனே மோட்டார்களை களமிறக்குங்கள் என்று உத்தரவிட்டு இருக்கிறார். இதனால் மாநகராட்சி நிர்வாகிகள் உடனடியாக களமிறங்கி பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.

சென்னை வெள்ளம்
மழை, வெள்ளம், நீர் அளவு, டிராபிக் ஆகியவற்றை கண்காணிக்கும் வார் ரூம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டு இருந்தது. அதிகாரிகள் பலர் மொத்தமாக கூடி சென்னை மழை நிலவரத்தை இங்கே கண்காணித்துக் கொண்டு இருந்தனர்.

திடீர் ஆய்வு
சென்னையில் மழை பெய்த நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இருந்தார். தஞ்சாவூருக்கு பயணம் மேற்கொண்டு இருந்தவர் நேற்று மாலையில் திருச்சியில் இருந்தார். அங்கிருந்து வேகமாக சென்னை வந்தவர், இரவு சென்னைக்கு வந்ததும் நேரடியாக ரிப்பன் மாளிகை சென்று இருக்கிறார்.

வேகமாக பயணம்
திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்த முதல்வர் காரிலேயே மழை நிலவரங்களை கேட்டுக்கொண்டு வந்து இருக்கிறார். பின்னர் 12.10 மணி அளவிற்கு ரிப்பன் மாளிகைக்கு சென்று அங்கு வார் ரூமில் மழை நிலவரத்தை கண்காணித்து இருக்கிறார். இரவோடு இரவாக தண்ணீர் வெளியேற வழி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

உத்தரவு
அதோடு உடனடியாக டிராஃபிக் சரி செய்யப்பட வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதோடு அங்கிருந்து இரவே களத்திற்கு சென்று சென்னையில் மெரினா அருகே இருக்கும் பல்வேறு சாலைகளில் ஆய்வு பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டார். முதல்வரே இப்படி நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டதால் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டனர்.

நீர் வெளியேற்றம்
இதனால் செங்கல்பட்டு உள்ளிட்ட ஏரிகளும் கண்காணிக்கப்பட்டு உடனே நீர் வெளியேற்றப்பட்டது. சென்னையில் நேற்று இரவே பல இடங்களில் மோட்டார்கள் களமிறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது வரை பல இடங்களில் நீர் வெளியேற்றப்பட்டு இருக்கிறது. மயிலாப்பூர், தி நகர், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் இன்னும் நீர் வடியவில்லை. இந்த பகுதிகளில் மட்டும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications