பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்வு - உச்சத்திற்கு போகும் அத்தியாவசியப் பொருட்கள்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 105 ரூபாய்74பைசாவாக விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் 101 ரூபாய் 92 பைசாவாக விற்பனையாகிறது.
சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 105.74 ரூபாய்க்கும், டீசல் 33 காசுகள் அதிகரித்து 101.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கவலை அடைந்துள்ளனர். எரிபொருளின் விலை அதிகரித்தால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. இதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 105.43 ரூபாய், டீசல் லிட்டர் 101.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று சென்னையில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 105.74 ரூபாய்க்கும், டீசல் 33 காசுகள் அதிகரித்து 101.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவது இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். வரி என்ற பெயரில் மத்திய அரசு மோசடி செய்வதாகவும், தேர்தல் நடக்கும் போது மட்டும் எரிபொருட்களின் விலைகள் சிறிது குறையும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நவம்பர் 14ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications