முழு ஊரடங்கு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பஸ்கள் இயக்கம்.. ஆனா யார் பயணிக்கலாம் தெரியுமா?
சென்னை: சென்னையில் இன்று காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் செல்வதற்கு வசதியாக சென்னையில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மக்களின் கனிவான கவனத்திற்கு.. இன்று அம்மா உணவகங்கள் இயங்கும்.. மூன்று வேளையும் சுடச்சுட சாப்பிடலாம்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால் தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளது.
அமலுக்கு வந்த ஊரடங்கு
இது தவிர வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.அதன்படி சுமார் ஏழு மாதங்களுக்கு பிறகு இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய 30 மணி நேர முழு ஊரடங்கு நாளை காலை 4 மணி வரை அமலில் இருக்கும்.
வெறிச்சோடிய சாலைகள்
முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் சாலைகள், பஸ் நிலையங்கள், மார்கெட்டுகள் என மக்கள் கூடும் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகள், முன்கள பணியாளர்கள், பத்திரிக்கை பணியாளர்கள், பால் விநியோகம் உள்பட அவசர பணியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓடுகின்றன. விமான சேவையும் இயங்கி வருகிறது.
மெட்ரோ ரயில் இயக்கம்
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்ட்ரல்- கோயம்பேடு-விமான நிலைய வழித்தடம் மற்றும் சென்ட்ரல் பரங்கிமலை வழித்தடத்தில் 2 மணி நேர இடைவெளியிலும், விம்கோ நகர் விமான நிலைய வழித்தடத்தில் ஒரு மணி நேர இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் மெட்ரோ ரயில்களில் வார இறுதி நாள் மற்றும் விடுமுறை நாளில் வழங்கப்பட்டு வந்த 50 சதவீத கட்டண சலுகை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பஸ்கள் இயக்கம்
வெளியூர்களில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வருபவர்கள் மெட்ரோ ரயிலில் தங்கள் இடங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் சென்னையில் ஒரு சில புறநகர் ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால் மருத்துவம் மற்றும் முன்கள பணியாளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்கள் மட்டுமே ரயில்களில் அனுமதிக்கப்படுவர். சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் செல்வதற்கு வசதியாக சென்னையில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தூய்மை பணியாளர்கள் மாஸ்க் அணிந்தும், சமுக இடைவெளியை பின்பற்றியும் இதில் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.