மணீஷ் பகீர் புகார்: “ஆச்சரியமாக உள்ளது.. யாரையும் உள்நோக்கத்துடன் நடத்தியதில்லை”: ககன்தீப் சிங் பேடி
சென்னை : தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தன்னை துன்புறுத்தியதாக, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி மீது ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் பகீர் புகார் தெரிவித்த நிலையில், அவரது குற்றச்சாட்டுகள் குறித்து ககன் தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு கூடுதல் ஆட்சியரான மணீஷ் நரவனே தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி மீது புகார் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிடிட்டு "எனது மனசாட்சியின் முடிவை பகிரங்கப்படுத்துகிறேன். இதனால் இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும்" என பதிவிட்ட நிலையில் அந்தப் பதிவை அழித்துவிட்டார்.

மணீஷ் நரவனே தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் "கடந்த ஜூன் 2021 முதல் ஜூன் 2022 வரை சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக இருந்த என்னை, பட்டியலினத்தைச் சார்ந்தவன் என்பதால் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தினார். மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டுமென்றே என்னை திட்டி அவமானப்படுத்தினார். இதனால உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றேன்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பிரச்சனையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்தார். அதேபோல கோப்புகளில் வேண்டுமென்றே கையெழுத்திடாமல் இரவு வரை காக்க வைத்தார். பின்னர் நாளை பார்க்கலாம் எனச் சொல்வார்.
ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக, மூத்த அதிகாரியாக இருந்து கொண்டு அவர் செய்த இந்த செயல்கள் அனைத்துமே எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. அவருடைய தொந்தரவு தாங்காமல் நான் மன அழுத்தத்திற்குச் சென்றேன். கதறி அழுதுள்ளேன். தற்கொலை செய்துகொள்ளவும் நினைத்தேன். மன அழுத்தத்திற்காக சிகிச்சையும் பெற்றேன்." என மணீஷ் நரவனே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆணையராக தான் பணியாற்றியபோது, துணை ஆணையராகப் பணியாற்றிய மணீஷ் நரவனே முன்வைத்த பகீர் குற்றச்சாட்டுகள் பற்றி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் தற்போதைய சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி.
அதில், "மணீஷ் மிகவும் நல்ல அதிகாரி, சுறுசுறுப்பாக செயல்படக் கூடியவர். அவர் அனுப்பிய கடிதத்தை படித்தேன். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 2 மாதத்திற்கு முன்பு கூட என்னிடம் இயல்பாக பேசினார். கோவிட் சமயத்தில் எனக்கு கீழே இருந்த அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தனித்தனியே வேலையை பிரித்துக் கொடுத்தேன். அனைவரும் இணைந்து மக்களுக்காக பணியாற்றினோம்.
நான் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய காலகட்டங்களில் இரு தரப்பினர் இடையே நடைபெற்ற சாதி சண்டைகள் பலவற்றை நான் தீர்த்து வைத்துள்ளேன். எனக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளை ஒருபோதும் சாதி ரீதியாக பிரித்துப் பார்த்தது கிடையாது.
எந்த ஒரு உள்நோக்கத்தோடும் நான் இதுவரை யாரையும் நடத்தியதில்லை. என்னுடைய பணி அனுபவத்தில் இதுபோன்ற புகார்கள் யாரும் என் மீது கொடுத்ததில்லை. இது என்னுடன் பழகிய அனைவருக்கும் தெரியும்" என சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications