புயல் பாதித்த பகுதிகளில், அரசு உடனே செய்ய வேண்டியது இதுதான்.. திருமுருகன் காந்தி சொல்வதை பாருங்கள்
Recommended Video

சென்னை: கஜா புயல் தாக்கிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு என்னவெல்லாம் அடிப்படை தேவை என்பது குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அரசுக்கு கோரிக்கையாக முன் வைத்தார்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார் திருமுருகன் காந்தி. அப்போது அவர் கூறியதாவது: புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள், வங்கிகளில் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். இந்த தருணத்தில் கடன்களை திரும்ப செலுத்த மக்களுக்கு எந்த வசதி வாய்ப்பும் கிடையாது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவது நிறுத்தப்பட்டபோது பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சுய உதவி குழுக்களில் பெறப்பட்ட கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகள் மீண்டும் தங்கள் பணிகளை ஆரம்பிப்பதற்கு கடனை மீண்டும் கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல் புதிதாக நிதி தர வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எவ்வாறு கடன்களை அரசு தள்ளுபடி செய்ததோ, அதே போல விவசாயிகளுக்கு புதிதாக பணம் வழங்க வேண்டும். ஆனால் அதை கடன் என்று சொல்லக்கூடாது.
மக்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து உள்ளபோது அதை மீட்டெடுக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயம் மீட்டெடுக்கப்படவில்லை என்றால் தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றம் என்பது இல்லாமல் போய்விடும். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது தனது இலக்கை எட்ட முடியாத, ஆலைகளும் மூடப்படும் போது வேலைவாய்ப்பு போய்விடும். வளர்ச்சி பறிபோய்விடும். இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டை எட்ட முடியாது என்று பொருளாதார அறிஞர்கள் வைத்து சொல்ல வைத்து அந்த நிறுவனங்களுக்கு மானியத்தை கொடுப்பதை போல, டெல்டா விவசாயிகளுக்கு திரும்பி கட்ட வேண்டியதில்லை என்ற அடிப்படையில் அரசு நிதி உதவியை உடனடியாக செய்ய வேண்டும். அல்லது விவசாயம் முற்றிலும் அழிந்து போகும் நிலை அதிமுக அரசாலும், மத்திய அரசாலும் உருவாக்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டை அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டியது வரும்.
டெல்டா மாவட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் விவசாய கூலிகளாக உள்ளனர். அவர்களுக்கு வீடுகளோ, சேமிப்பு வசதி கிடையாது. அவர்கள் இப்போது விவசாயம் இன்றி வேலை வாய்ப்பின்றி உள்ளனர். விவசாயக் கூலிகள் துயரை போக்குவதற்கு, உடனடியாக அவர்களுக்கு நிதி உதவி செய்வதோடு அந்த பகுதிகளில், கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்க கூடிய மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும். மாணவர்கள் கழுத்தில் இந்த அரசு சுறுக்கு மாட்டக்கூடாது. கல்விக் கடனை தள்ளுபடி செய்யாவிட்டால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் படிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இது அந்த குடும்பத்தின் சூழ்நிலையை மேலும் மோசமாக்கும்.












Click it and Unblock the Notifications