’திமுக ஸ்லீப்பர் செல்’ பைத்தியம்னு சொல்றாங்க! அண்ணாமலையை விடாமல் மீண்டும் சீண்டும் காயத்ரி ரகுராம்!
சென்னை : என்னை திமுக ஸ்லீப்பர் செல் என்று அழைக்க முடியவில்லை அதனால் இப்போது அவர்கள் என்னை கெட்ட வார்த்தைகள் சொல்லியும், என்னை பைத்தியம் என்றும், என் பெண்மையை அவமானப்படுத்துகிறார்கள் என பாஜகவில் இருந்து விலகியுள்ள காயத்ரி ரகுராம் மீண்டும் விமர்சித்துள்ளார்.
பாஜகவில் இருந்த சூர்யா சிவா - டெய்சி சரண் ஆடியோ விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பும் வகையில் தொடர்ந்து காயத்ரி ரகுராம் அடுத்தடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டார். இதை அடுத்து கட்சியில் இருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இதனால் அதுவரை மறைமுகமாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த காயத்ரி ரகுராம் அடுத்து வெளிப்படையாகவே அண்ணாமலையை விமர்சிக்க தொடங்கினார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாஜக அண்ணாமலையை அடுத்தடுத்து விமர்சித்து பதிவுகளை இட்டு வருகிறார் அவர்.
களத்துல சந்திப்போம்.. பாஜக அண்ணாமலைக்கு சவால் விட்ட காயத்ரி ரகுராம்! 'இந்த’ கட்சியில் இணைய போகிறரா?
காயத்ரி ரகுராம்
விரைவில் களத்தில் சந்திப்போம் என சவால் விட்டுள்ள காயத்ரி அண்ணாமலை மத்திய அரசால் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை வைத்து மீண்டும் மீண்டும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் பாஜகவினர் அவரை சமூக வலைதளங்களில் சீண்டி வருகின்றனர். இந்நிலையில் வார் ரூம் மூலம் பாஜகவினர் சிலர் தன்னை சீண்டுவதாகவும், வளர்ப்பு மகனுக்கு தந்தை பாதுகாப்பு வழங்கியுள்ளார் என அண்ணாமலையை காயத்ரி ரகுராம் மீண்டும் விமர்சித்துள்ளார்.
ட்விட்டர் போர்
இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,"பல உண்மையான காரியகர்த்தாக்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர், இப்போதும் கூட ஒவ்வொரு கட்சியிலும் பல தொண்டர்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள்.. தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளது. அவர்களுக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதா? ஒருமுறை உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் கொடுத்தால், தேசத்திற்காக உயிரை தியாகம் செய் என்று கேலி செய்தார்கள். இப்போது வளர்ப்பு மகன் அழுதுகொண்டே கெஞ்சி Z பிரிவு பாதுகாப்பைக் கோரினார்.
Y பிரிவு பாதுகாப்பு
வளர்ப்பு மகனுக்கு தந்தையால் இப்போது சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது அச்சுறுத்தலுக்காக அல்ல, வீணான விளம்பரதாரர்களுக்காக. Y பிரிவு பாதுகாப்பு போதாதா? ஏன் இவ்வளவு ஆடம்பரம்? தமிழ்நாட்டையே தமிழகம் என்று அழைக்க பெருமைமிக்க கன்னடருக்கு நம் பணத்தை வீணாக்குவதற்கு பதிலாக ஏழை எளிய சாமானியர்களுக்கு அதே பணத்தை செலவழித்திருக்கலாம்.
அண்ணாமலை
கடந்த இரண்டு வருடங்களில் கர்நாடகா வாரிசு சக்தி வார் ரூம் யூடியூப் மூலம் பல லட்சங்கள் கோடிகளை செலவழித்து பாஜகவிற்குள் நுழைந்துள்ளது. எனது ட்வீட்களுக்கு எந்த கேள்விக்கும் பதில் இல்லாமல் மற்றும் டிவி பேட்டியில் பதில் இல்லாமல் அண்ணாமலை தனது கதறலை வார் ரூம் மூலம் அவிழ்த்துவிட்டார். இப்போது அண்ணாமலையின் வார் ரூம் என்னை திமுக ஸ்லீப்பர் செல் என்று அழைக்க முடியவில்லை.
நேரடி போட்டி
அதனால் இப்போது அவர்கள் என்னை கெட்ட வார்த்தைகள் சொல்லியும், என்னை பைத்தியம் என்றும், என் பெண்மையை அவமானப்படுத்துகிறார்கள். சூப்பர் ஆ ஹிந்து தர்மத்தை மற்றும் சித்தாந்தத்தைப் பரப்புகிறார்கள்" என பதிவிட்டுள்ளார் . இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கும் முன்னர் "ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா?" என சவால் விட்டது குறிப்பிடத்தக்கது.