அதிமுகவை கைவிட்டு நடிகர் விஜய் கட்சியில் ஐக்கியமா? பரவும் தகவல்.. காயத்ரி ரகுராம் தந்த பரபர விளக்கம்
சென்னை: பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்த நடிகை காயத்ரி ரகுராம் விரைவில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்தில் சேர உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அதுபற்றி அவர் முக்கிய விளக்கம் தந்துள்ளார்.
நடிகையாகவும், நடன இயக்குனராகவும் இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்தார். இவருக்கும், அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காயத்ரி ரகுராம் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பாஜகவில் இருந்து வெளியேறி ஓராண்டுகளாக அண்ணாமலையை விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
இதற்கிடையே தான் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ள விஜய் 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் காயத்ரி ரகுராம் அதிமுகவை விட்டு விலகி விஜய் கட்சியில் இணைய உள்ளதாக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.
அதாவது பல்சர் 220 என்ற பெயரில் கொண்ட எக்ஸ் பக்கத்தில், ‛‛கட்சி தாவ தயாராகும் நடிகை காயத்ரி ரகுராம்! சமீபத்தில் அதிமுகவில் இணைந்த காயத்ரி தனக்கு எந்த பதவியும் இப்போதைக்கு தரப்படாது என்றபோதியிலும் அரசியல் அடைக்கலம் தேடி அங்கு இணைந்துள்ளார். நடிகர் விஜய் ஆரம்பித்த TVK Party யில் இணைய புஸ்சி ஆனந்த் உடன் பேச்சுவார்த்தை என்ற தகவல்'' என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவுக்கு காயத்ரி ரகுராம் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இந்த கருத்தை பதிவிட்ட நபருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த பதிவை குறிப்பிட்டு காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛இந்த விரக்தியடைந்த ஆன்மாவிற்கு நான் வருந்துகிறேன். தீவிர லூசுதனம் எப்போதும் என்னை குறிவைக்கிறது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.
நான் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாக பணியாற்றக்கூடிய இடம் அதிமுக. நிர்வாகம் தெரிந்த அ.தி.மு.க.வை மட்டுமே ஆட்சி செய்ய மக்கள் விரும்புவார்கள். தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை அதிமுக மட்டுமே புரிந்து கொண்டுள்ளது. நான் எப்போதும் அதிமுக மூலம் சேவை செய்வேன் மக்களுக்காக.
பதவி ஒதுக்கப்பட்ட வேலை, நான் அது இல்லாமல் வேலை செய்வேன். 6 நாட்கள் நான் குடும்ப திருமணத்தில் பிஸியாக இருந்தேன். அதுக்காக உங்களுக்கெல்லாம் ஏன் இப்படி குழப்பம். எப்போதும் குழப்பமான பைத்தியக்காரர்கள் அண்ணாமலையின் வார்ரூமில் மட்டுமே இருக்க முடியும்'' எனக்கூறியுள்ளார். இதன்மூலம் விஜயின் கட்சியில் அவர் இணைவதாக பரவும் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications