சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீனவர் நலன் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வாழ்க்கை குறிப்பு!
சென்னை: சமூக நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கீதா ஜீவன், 3-வது முறையாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மு. க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் எல்லோரும் எதிர்பார்த்தபடியே தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற கீதா ஜீவனுக்கு சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
மு.க ஸ்டாலினுக்கு ராசியான 7 ஆம் எண்: 133 எம்எல்ஏக்கள்... 34 அமைச்சர்களுடன் 7ஆம் தேதி பதவியேற்பு
கீதா ஜீவன் வாழ்க்கை குறிப்பு
கீதா ஜீவன் தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என். பெரியசாமியின் மகள் ஆவார். எம்.காம், பி.எட் பட்டதாரியான இவர் தூத்துக்குடி போல் பேட்டையில் வசித்து வருகிறார்.
3- வது முறை அமைச்சர்
இவர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகவும், மாநில மகளிர் அணி துணை செயலாளராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.ஏற்கனவே இருமுறை சட்டமன்ற உறுப்பினராக வென்ற கீதாஜீவன் சமூக நலத்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்துள்ளார். தற்போது 3-வது முறையாக அவர் சமூக நலத்துறை பதவியை அலங்கரிக்க உள்ளார். கீதாஜீவனின் கணவர் ஜீவன் ஜேக்கப் ராஜேந்திரன். இவர்களுக்கு மகிழ்ஜான் சந்தோஷ் என்ற மகனும், ஜீனா எபி சுந்தரி என்ற மகளும் உள்ளனர்.
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வாழ்க்கை குறிப்பு
திமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (68) உடன்குடி அருகே தண்டுபத்து கிராமத்தைச் சேர்ந்தவர். 2001 மற்றும் 2006-ல் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் , 2009 இடைத்தேர்தல், 2011, 2016 மற்றும் தற்போது 2021 ஆகிய தேர்தலிகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 2001-ல் அதிமுக ஆட்சியில் கால்நடை பாராமரித்துறை அமைச்சராக இருந்தார்.
தொடர் வெற்றி
தொடர்ந்து 2006-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வென்ற அவர் பின்னர் தி.மு.க.வில் இணைந்ததால் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் 2009-ம் ஆண்டு இடைத்தேர்தல், 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் தி.மு.க. சார்பில் தொடர்ச்சியாக போட்டியிட்டு வென்றுள்ளார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராகவும் உள்ளார். இவருக்கு ஜெயகாந்தி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.