இன்று முதல்.. புயலென புறப்படும் ஜிகே வாசன்! கரையும் கட்சியை காப்பாற்ற முடியுமா? மாற்றி யோசிக்கனும்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதாக கூறிக் கொண்டு, இன்று முதல் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார் ஜி.கே.வாசன்.
வாசன் சுற்றுப் பயணம் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு உதவுமா, அல்லது வாசன் தனது வியூகத்தை மாற்ற நேரம் வந்து விட்டதா என்பது குறித்து வாத, விவாதங்கள் எழுந்துள்ளன.
தென்மாவட்ட த.மா.கா.நிர்வாகிகளை மதுரையில் இன்று சந்தித்து பேசுகிறார் ஜி.கே.வாசன். இந்த நிலையில்தான், அவரது அடுத்தகட்ட செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் முணுமுணுப்பது நமது காதுகளில் விழுகிறது.

அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் இருக்கும் அவரது கட்சி, சட்டசபை தேர்தலில் படு தோல்வி அடைந்தது. தமிழக அரசியலில் ஏற்கனவே மிக சோர்வாக இருந்த த.மா.கா.வின் இரண்டாம் நிலை தலைவர்களும் நிர்வாகிகளும் தேர்தல் தோல்வியால் மீண்டு துவண்டு போய்விட்டனர். இதனால் தங்களின் அரசியல் எதிர்காலம் கருதி திமுகவில் இணைந்து வருகின்றனர்.

கட்சி நிலைமை
பொதுத்தேர்தலில் வாசன் போட்டியிட்டதாக வரலாறே இல்லை, மூன்று முறையும் ராஜ்யசபா மூலமாகவே எம்.பியாகி இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். ஆனால் கட்சி? வாசன் தனிப்பட்ட முறையில் தனது அரசியல் இருப்பை தக்க வைத்தாலும், அவரது கட்சியும், கட்சியைச் சேர்ந்தவர்களும் வளருவதற்கு பதில் தேய்ந்துதான் வருகின்றனர்.

கரையும் கட்சி
கட்சியிலிருந்து பலரும் விலகுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தன் கண் முன்னே கட்சி கரைவதை ஜீரணிக்க முடியாத நிலையில் பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்து தனது இருப்பைக் காட்டிக்கொண்டார் வாசன். மேலும், கட்சியின் வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாக அறிவித்தார்.

கேள்விக்குறிதான்
அதன்படியே மதுரையில் இன்று நிர்வாகிகளை சந்திக்கிறார் வாசன். இரண்டாம் நிலை தலைவர்களையும் நிர்வாகிகளையும் தக்க வைத்துக்கொள்வதற்காக இந்த சந்திப்புகளை வாசன் நடத்தினாலும் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறுவது கேள்விக்குறி தான் என்கிறார்கள் தமாகாவினர்.

பாஜக கொடுத்த ஆஃபர்
மேலும்,'தமாகாவை பாஜகவில் இணைத்து விடுங்கள். மத்தியில் அமைச்சர் பதவியும் தமிழக பாஜக தலைவர் பதவியும் தருகிறோம் என சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வாசனிடம் இந்த ஆஃபரை வைத்தார் மோடி. ஆனா, வாசனோ, ஏதோ தம் கட்சியில் ஒன்னரை கோடி தொண்டர்கள் இருப்பது போல முறுக்கிக்கொண்டார். இப்போ என்னாச்சு? கட்சி கரைவதுதான் மிச்சம்.

செல்வாக்கு இல்லாத கட்சியாகிவிட்டதே
எதார்த்தத்தை புரிந்துகொண்டு அரசியல் செய்ய வேண்டும்; அரசியல் முடிவுகளையும் எடுக்க வேண்டும். இதை புரிந்துகொள்ளாதவராக இருக்கிறார் வாசன். கட்சியில் ஏற்கனவே ஊருக்கு 4 பேர் தான் இருக்கிறார்கள். அதனால் இப்படி சுற்றுப்பயணம் செய்வதை விட்டுவிட்டு, கட்சியின் பொதுக்குழு செயற்குழுவைக் கூட்டி, கட்சி(?)யை என்ன செய்யலாம் என ஆலோசிப்பதுதான் ஆரோக்கியமானது" என்கிறார்கள் மூப்பனார் விசுவாசிகள்.












Click it and Unblock the Notifications